சனி, 1 டிசம்பர், 2018

அப்பாவிற்கும் ஒரு கடிதம்

அன்புள்ள அப்பாவிற்கு,

நலமா?  கடிதம் எழுதும் படலம் தொடங்கியதுமே உனக்கும் ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் உன் பிறந்த நாளன்று உனக்கு எழுதுவது கூடுதல் சுகம் என்பதால் கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. நீயும்... நானும்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாயின் பங்களிப்பை யாரும் கேள்வி கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. கருவில் சுமப்பதில் இருந்தே அந்த பந்தம் சாஸ்வதம் ஆகி விடுகிறது. ஆனால் தந்தையுடனான உறவு அப்படி இறுகப் பிணைக்கப் பட்டதில்லை. அதனாலேயே ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராய் இருப்பதைத் தாண்டி ஒரு தந்தையின் முக்கியத்துவம் பலருக்கும் - பல தந்தைகள் உட்பட - புரிவதில்லை. ஒரு மிகச் சிறந்த தந்தையை பெற்றவன் என்ற முறையில் உன்னிடத்தில் இருந்து நான் கற்றவைகளையும், பெற்றவைகளையும் கடிதச் சுருக்கமாய் சொல்கிறேன் கேள்.

உன்னைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதுமே நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்த தருணங்கள் தான் மனதை நிறைக்கின்றன. அதுவே ஒரு பெரிய வரம் என்றாலும் அந்தச் சிரிப்புகளுக்குப் பின்னால் இருந்த நகைச்ச்சுவை உணர்வு அதை விடப் பெரிய வரம். இன்றளவும் என்னை அறிந்த அநேகமானோர் என்னிடம் ரசிப்பது அந்த நகைச்சுவை உணர்வைத் தான். அதன் மூலாதாரம் நீ தான். குருட்டுக் கொக்கு, திருமலை நாயக்கர் கதைகளை சொல்லும் பொழுது அந்தக் கதைகளை விட நீ அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சொல்வதைப் பார்த்து நாங்கள் சிரித்தது தான் அதிகம். அதே போல் எவ்வளவு காட்டமான கருத்தாய் இருந்தாலும் அதைக் கிண்டலாய், கேட்பவர் கூட கோபம் மறந்து சிரிக்கும் வகையில் நீ கூறுவதை நிறையவே இரசித்திருக்கிறேன். தந்தை என்றால் பத்தடி தூரம் நின்று பயபக்தியோடு பேச வேண்டுமென்று அதிகாரச் செருக்குடன் விறைப்பாய் நிற்காமல் உன்னை நாங்கள் விளையாட்டாய் சீண்டிய போதும் எங்களுடன் சேர்ந்து சிரித்த பக்குவம் தான் எங்கள் தன்நம்பிக்கையின் முதற்படி.

சிரிப்பிற்கு அடுத்ததாக உன்னிடம் பெரிதும் ரசித்த, கொஞ்சமே கொஞ்சம் கற்றுக்கொண்ட பண்பு சிரத்தை. என் பள்ளிப் பருவத்தில் பல நாட்களில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் கிளம்பி பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாத நிலையில் இருக்கும் திருவள்ளுவர் பஸ்ஸில் எட்டு ஒன்பது மணி நேரம் பயணித்து, எங்கோ ஒரு மூலையில் உண்ணச் சரியான உணவு கூடக் கிடைக்காத அத்துவானக் காட்டில் கொளுத்தும் வெயிலில் கருகி, மறுபடியும் ஓர் கடகடா வண்டி பிடித்து நள்ளிரவு தாண்டி தான் நீ வீட்டிற்கு வருவாய். எங்களுக்காக. பல சமயம் அடுத்த நாளே கூட வேறு எங்கோ செல்ல வேண்டியிருக்கும். உடல்நிலை கூட முன்னப் பின்னே இருக்கும். ஆனால் ஒரு நாள் கூட நீ அதிகமாய் தூங்கியோ, சுணங்கிப் படுத்தோ நான் பார்த்ததில்லை. அப்படி நீ பயணித்த சமயங்களில் எங்களுடன் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி உன் சிரத்தை என்னுடன் இருந்து எனக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இவ்வளவு அலைச்சல் இருந்த பெரும்பாலானோரை புகை, மது என்று ஏதோ ஒரு கெட்ட பழக்கம் பீடித்திருக்கும். அதை சமூகம் கூட பெரிதாய்க் கண்டிப்பதில்லை. அவர்களுக்கும் ஒரு ஆறுதல் தேவை தானே என்று ஆதரவாய் தான் பேசியிருக்கும். ஆனால் அப்படி எந்தச் சாக்கு போக்கும் சொல்லாமல் இன்று வரையிலும் பக்தியுடனும், நல்ல பண்புகளுடனும் இருப்பது உன் தனிச் சிறப்பு என்றே சொல்லலாம். உன்னை கலைந்த  தலையுடனோ, நீறு இல்லாத நெற்றியுடனோ, எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமலோ பார்த்ததே இல்லை. வெளிநாடுகள் சென்று, வெவ்வேறு சூழ்நிலைகளில் மது அருந்த, புகைக்க, புலால் உண்ண சந்தர்ப்பங்கள், ஏன் கட்டாயங்கள் இருந்த பொழுதும் அந்த எண்ணம் சிறிதளவும் எனக்கு வராததற்கு முழு முதல் காரணம் நீ. எவ்வளவு உபதேசம் செய்திருந்தாலும், நல்ல சூழ்நிலை இருந்திருந்தாலும் கண்முன் உதாரணமாய் நீ வாழ்ந்து காட்டியதைப் போல் தாக்கம் இருந்திருக்காது. இன்னும் சுருங்கச் சொன்னால் நான் நானாக இருப்பதில் ஆகப் பெரும் பங்கு உன்னுடையது.

நீ வரையும் அழகிய படங்களைப் போல் சரளமாய், இயற்கையாய், அழகாய் கூறி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்னும் கூற நிறைய விஷயங்கள் இருந்தாலும் இங்கே நிறுத்தினால் அழகாய் இருக்கும் எனத் தோன்றுகிறது - ஒரு நல்ல பாடலின் பின்பு வரும் இரம்மியமான  மௌனத்தைப் போல்.

என்றும் அன்புடன்,
உன் மகன்

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அம்மாவிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள அம்மா,

தாய் நாட்டிற்கு கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருப்பதாகக் கூறினாய். அதற்கு முன்னோட்டமாய் முதலில் உனக்கு ஒரு கடிதம் எழுதி பயிற்சி பெறலாம் என்று உத்தேசம். மின்னஞ்சல் கூட பழைய தொழில்நுட்பமாகி மேக வழிப் பகிரல் (அதான் Cloud Sharing) செய்யும் அவசர யுகத்தில் நினைப்பதையெல்லாம் நிதானமாய், கோர்வையாய் பகிரத் தான் நேரம் கிடைப்பதில்லை. ஒரு நீண்ட வாரம் தொடங்கும் முன் நிசப்தமான இரவில் கணினி முன் அமரும் இது போன்ற அரிய தருணங்களில் தான் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகள் தூசு தட்டப்பட்டு, மெருகேறி, வார்த்தைகளாய் மாறும். உன் பிறந்த நாளுக்கு எழுத உத்தேசித்து இதோ ஒரு வார இறுதியில் ஒரு வழியாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன் - சீக்கிரம் முடித்து விடுவேன் என்ற (அதீத) நம்பிக்கையுடன்.

பெரிதாய் பரிச்சயம் இல்லாத நபர்களையும் விஷயங்களையும் பற்றி எழுதுவது சற்று சுலபம். கொஞ்சம் புதிய கருத்துக்கள், ஒரு வித்தியாசமான பார்வை, நிறைய புருடா கலந்தடித்தால் போதும். ஆனால் பிறக்கும் முன்னரே பரிச்சயமான ஒருவருடன் தினசரி விஷயங்களைத் தாண்டி ஆழ் மனதில் பதிந்த நினைவுகளை புரட்டிப் பார்த்து, மிகைப்படுத்தாமல்,  சலிப்புத் தட்டாமல் வடிகட்டி, செயற்கையாய் இல்லாமல் பகிர்வது அவ்வளவு சுலபம் இல்லை. குறிப்பாக நம் குடும்பத்தில் அந்த வழக்கம் அறவே கிடையாது. ஆனால் அம்மாவிடமே சொதப்பும் தைரியம் இல்லாமல் போனால் எழுத முனைவதே வீண் என்பதால் தொடர்கிறேன்; சொதப்பினாலும் நீ வழக்கம் போல ஒரு "ஹ்ம்ம்... லெஸ்ஸா தா உண்ணியூ" பதிலை தலையை மெல்லமாய் ஆட்டிக்கொண்டே தருவாய் என்று தெரிந்து.

கடிதம் எழுதும் எண்ணம் வந்ததுமே உன்னைப் பற்றிய என் முதல் நினைவு என்னவென்று யோசித்தேன். சத்தியமாய் தெரியவில்லை. சானடோரியம் வீட்டு துபுதுபு மோட்டார் சத்தத்தில் உரையாடிய அதிகாலைப் பொழுதுகள், நள்ளிரவில் எழுந்து தொணதொணத்த தருணங்கள், சீனியிடமும் ஆனந்திடமும் பொம்மைகள் பகிர்ந்து திட்டு வாங்கியது, ஆல்பம் என்ற வார்த்தை மனதில் பதியாமல் "தூகம்பம்" என்று குழப்பியது, விதவிதமான ஆஸ்பத்திரிகளுக்கு படை எடுத்து மருத்துவ சிகாமணிகள் வைத்தியம் பயில உதவிய மாலைப் பொழுதுகள்  என பல காட்சிகள் கண்முன் நிழலாடினாலும் அவற்றை காலவாரியாக வரிசைப்படுத்த முடியவில்லை. இந்த முயற்சியில் நான் உணர்ந்த மற்றொரு விஷயம் - உன்னைப் பற்றிய என் நினைவுகள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுகச் சிறுக சேகரித்தவை. "கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி" ஒரே கடிதத்தில் எழுதி தள்ள முயற்சித்தால் "க க க போ" தான். அதனால் முதலில் "talking points" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல் ஒட்டு மொத்த நினைவுகளையும் மிகச் சில உணர்வுகளாய்ப் பிரித்து ஒவ்வொரு உணர்விலும் கூற வந்ததை சுருங்கக்  கூறி இருக்கிறேன். எதுவும் விட்டு போகவில்லை என்கிற நப்பாசையுடன்.

முதலில் அடிக்கோடிட்டு கொட்டை எழுத்துக்களில் குறிப்பிட வேண்டிய விஷயம் நன்றி.  அம்மா தான். கடமை தான். நன்றி அவசியம் இல்லை தான். ஆனால் நீ எனக்காக செய்ததை உலகில் எத்தனை பெண்கள் அவர்கள் மகன்களுக்கு செய்திருப்பார்கள் என்பது சந்தேகமே. அது எனக்காக உன் கனவுகளை தியாகம் செய்ததில் தொடங்கி, ஒரு நாள் விடாமல் போஷாக்கான உணவு சமைப்பதிலிருந்து, எங்கும் நிம்மதியாய்ச் செல்ல முடியாமல்  மருந்துக் கூடை சகிதம் அலைந்த தருணங்களில் கூட சலித்துக் கொள்ளாத அளப்பறிய அன்பு வரை உன்னுடன் கழித்த ஒவ்வொரு நொடிக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதை இந்த கடித்தத்தைத் தவிர வேறு எங்கு கூறினாலும் செயற்கையாகத் தான் இருக்கும்.

செய்தவைகளால் நன்றி பிறந்ததென்றால் செய்வித்தவைகளால் தெளிவு பிறந்தது. அன்பு ஸ்டோரில் அரை குயர் ஏடு வாங்குவது, கீழ மார்க்கெட்டில் காய்கறி பேரம் பேசி வாங்குவது, துணிகளை ஊறவைத்து,  துவைத்து, அலசி பிழிந்து காயப்  போட்டு  மடித்து வைப்பது, பாத்திரம் துலக்குதல், அடி பம்பில் தண்ணீர் எடுத்து அண்டாவை நிறைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது என ஏறக்குறைய எல்லா வீட்டு வேலைகளையும் சிறு வயதிலேயே செய்து விட்டதால் இன்று வரை எந்த வேலையையும் குறைவாக நினைத்ததும் இல்லை, எந்தச் சூழ்நிலையிலும் செய்வதறியாது திரு திருவென்று விழித்ததும் இல்லை. தெரியாத ஊரில் தனியாக இருந்த காலங்களில் இந்த அடித்தளம் எவ்வளவு  உதவியாக இருந்தது என்பதை கடிதச்ச்சுருக்கமாய் விவரித்து விட முடியுமா என்று தெரியவில்லை.

செய்தவை செய்வித்தவை கிடக்கட்டும். நீ இருந்ததாலேயே எவ்வளவோ பெற்றிருக்கிறேன் தெரியுமா? மூன்று பட்டப் பின் பயிற்ச்சிகளால் நிறைந்த ஞானம், அதில் தங்கப்  பதக்கங்கள் பெற்றும் பெருமை பேசாத அடக்கம், ஏதோ டைரியில் தோன்றியது எழுதுவதைப் போல் முனைவர் ஹரிதாஸுக்கு மாதம் ஒரு பொருளாதார ஆய்வறிக்கை எழுதித் தரும் அறிவு, பேச்சிலும் சிந்தனையிலும் தெளிவு, அநாவசியமாகப்  பேச மறுக்கும் பக்குவம், மனதாரச் சிரிக்கும் குழந்தைத்தனம், கேட்காமல் கொடுக்கும் தாராளம், பக்திச் சிரத்தை, செய்வன திருந்தச் செய்யும் அர்ப்பணிப்பு -இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்; கடிதம் காவியமாகி விடும் என்பதால் நிறுத்தி விட்டேன். இப்படிப்பட்ட ஒருவளை இருபது ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பார்த்துக் கொண்டிருந்தால் அதில் கொஞ்சமாவது ஒட்டாதா என்ன?

இது வரை சொன்னதையும், சொல்லாததையும் இன்னமும் சுருக்கி சொந்தக் குரளா(லா)கச் சொல்கிறேன் கேள்...

வெற்றியும் நிச்சயம் பெற்றிடும் நின்போன்ற
பெற்றவள் பெற்ற சேய்

என்றும் அன்புடன்,
உன் மகன்


ஞாயிறு, 27 மே, 2018

பொட்டு

"அம்மா ப்ளீஸ்... திஸ் இஸ் நாட் ஃபேர்!" எண்ணெய்  தடவி சீராய் இழுத்து வாரப்பட்ட கூந்தலை அநாயசமாக குதிரைவால் கொண்டையாய் முடிந்து கொண்டே அங்கும் இங்கும் அலைபாய்ந்த படி அம்மாவிடம் சீறினாள் ஐஸ்வர்யா. இன்று அவள் உயர்நிலை பள்ளிக்குச் செல்லும் முதல் நாள். புதிய பள்ளி, புதிய நபர்கள், புதிய சீருடை, புதிய மாணவர்கள் என எல்லாம் புதிது - அம்மாவின் இந்த அனத்தலைத் தவிர.

"சொன்னா கேளு ஐஷு. பொண் குழந்தைங்க பொட்டு இல்லாம இருக்கக் கூடாதும்மா... அது அமங்களம். வீட்டுக்கு ஆகாது! அம்மா சொன்னா கேளுடா...ப்ளீஸ்..." அம்மாவும் விடாப்பிடியாய் சாந்துக் குப்பியுடன் ஐஸ்வர்யாவைப் பின்தொடர்ந்தாள்.

"யூ நோ வாட்... திஸ் ஈஸ் ஸோ அந்நாயிங்..." அம்மா விட்டுக் கொடுக்கப் போவதில்லை என உணர்ந்து சலித்துக் கொண்டே சரணடைந்தாள் ஐஸ்வர்யா. வழக்கம் போல பள்ளிக்குள் நுழைந்ததும் பொட்டை அழித்து விட வேண்டும்! நெற்றியை வேண்டா வெறுப்பாய் நீட்டினாள்.

அம்மா ஒரு குட்டித் திலகமிட்டு வாஞ்சையாய் கன்னம் வருடி "இப்போ தான் மஹாலக்ஷ்மி மாதிரி இருக்க" என்று புன்னகைத்தாள்.

"வாட்டெவர் அம்மா..." வெடுக்கென்று பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் ஐஸ்வர்யா. அம்மாவின் முகம் வாடியதை அவள் பார்க்கவில்லை; உணர்ந்தாள். ஆனால் அவள் மனதைப் புரிந்து கொள்ளாத அம்மாவிற்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவை தான் எனத் தோன்றியது. அவசரமாய் காலணிகள் அணிந்து அம்மாவிடம் கூறாமல் படார் என கதவை அடைத்து பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மெல்பர்னின் இதமான கோடைக்காலக்  காலையை ரசிக்க விடாமல் மனதில் அவளது வளர்நிலைப் பள்ளி நினைவுகள் அலைமோதின.

முதல் ஒன்றிரண்டு நாட்களில் "வாட் ஈஸ் தட்?" என்று தொடங்கும் கேள்விகள், இரண்டாம் மூன்றாம் மாதங்களில் "யூ லுக் ஃபன்னி..." நையாண்டிகளாய்  பரிணாமித்து, கல்வி ஆண்டு முடியும் தருவாய்களில் ஆளுக்கு ஒரு முறை வந்து பொட்டைத் தொட்டு "டேக்" செய்வது,  நடந்து செல்லும் போது கால்களைத் தட்டி விடுவது என விஸ்வரூபம் எடுப்பது ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் அவள் அனுபவித்த நரக வேதனை. பெற்றோர்கள் தலையிட்டும், ஆசிரியர்கள் குறுக்கிட்டும் பெரிதாய் எந்த மாற்றமும் வரவில்லை. ஆஸ்கர் அமைதியாய் இருந்தால் ஆண்டி, பெத்தனியைக் கண்டித்தால் ஸ்டெஃபனி என ஏதோ ஒரு வகையில் தொல்லை இருந்து கொண்டே இருந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் பாழாய்ப் போன இந்தப் பொட்டு. மஹாலக்ஷ்மியாம் மஹாலக்ஷ்மி. பள்ளியில் நுழைந்ததுமே அவசரமாய் பெண்கள் ஒப்பனை அறைக்குச் சென்று அவள் பொட்டை அழிக்க ஐஸ்வர்யா மறைந்து ஆஷ் வெளிவந்தாள். புன்னகையுடன் முகத்தை மற்றோர் முறை கண்ணாடியில் பார்த்து விட்டு அவள் வகுப்பைத் தேடிச் சென்று தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாள். ஆஸ்திரேலிய சொல்லாடல்கள் கலந்த ஆங்கிலமும், சக வெள்ளைக்கார மாணவர்கள் கடினமின்றி அழைக்கக் கூடிய ஆஷ் என்ற பெயரும் தனக்கு இந்தப் புதுப் பள்ளியில் ஒரு அங்கீகாரத்தையும், உரிமையையும் பெற்றுத் தரும் என்று பெரிதும் நம்பினாள். எல்லா விதத்திலுமே அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

வகுப்பு தொடங்கும் நேரம். ஐஸ்வர்யாவின் வகுப்பாசிரியை வகுப்பின் முன் வந்து சரளமான ஆங்கிலத்தில் மாணவர்களை வரவேற்று, வாழ்த்தி, பின் சுவாரசியமான விஷயம் ஒன்றைக்  குறிப்பிட்டார். "எல்லா ஆண்டுகளுமே எனக்கு சிறப்பானவை என்றாலும் இந்த ஆண்டு நான் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளேன். காரணம் நம் வகுப்பில் நம்மோடு இணையப்போகும் ஒரு மாணவி. 'ஸ்பெல் பீ' போட்டியில் ஆஸ்திரேலிய அளவில் முதலிடம் பிடித்து, அதோடு மட்டும் நிற்காமல் அறிவியல் போட்டிகள், ப்ரோக்ராமிங், பாட்மிண்டன் என பல துறைகளில் பரிசுகளைக் குவித்த ஒரு ஆல் ரவுண்டர்..."

ஐஸ்வர்யாவிற்கு அதற்கு மேல் எதுவுமே கேட்கவில்லை. பொதுவாகவே இது போன்ற அதி மேதாவி மாணவர்களுக்கு திமிர் அதிகமாய் இருக்கும். பற்றாத குறைக்கு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு வேறு. அனைவருக்கும் கடவுள் ஆகி விடுவாள். அநேகமாய் ஒல்லியாய், உயரமாய், நீலக் கண்ணும், நீளமான தங்க நிறக் கூந்தலும் கொண்ட ஒரு 'ஹாட் பிளான்ட்'. இனி என் பாடு திண்டாட்டம் தான். ஒரே ஆறுதல் இந்த முறை பொட்டு ஒரு பிரச்சனை இல்லை. ஹ்ம்ம்.

இப்படி ஐஸ்வர்யா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பிரபல மாணவி உள்ளே நுழைந்தாள். "இது தான் நான் குறிப்பிட்ட மாணவி... கயல்விளி. எல்லோரும் அவளை கைதட்டி வரவேற்கலாம்" என்று ஆசிரியர் கூற கயல்விழி புன்னகையுடன் தலைவணங்கி வரவேற்பை ஏற்றுக்கொண்டாள். ஒரு சிறிய பொட்டும், திருநீற்றுக் கீற்றும் அவள் நெற்றியை அலங்கரித்திருந்தன.

இவளா அது? ஐஸ்வர்யாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கயல்விழி என்றால் அநேகமாக தமிழ் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இப்படிப் பொட்டும் திருநீறும் அணிந்து கொண்டா அத்தனை போட்டிகளில் கலந்து கொண்டாள்? என் பெயரை கடித்து விழுங்கும் நபர்கள் இவ்வளவு கடினமான பெயரை ஏறத்தாழச் சரியாகச் சொல்கிறார்கள். இவளை யாரும் 'டேக்' செய்யவில்லையா? என்ன நடக்கிறது இங்கே?! எனக்கு மட்டும் தானா இந்த அநீதி? முதல் நாளே இவ்வளவு உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான தாக்கங்களை எதிர்பார்க்காததால் அவளால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. இடைவேளை வந்ததும் அவளிடமே கேட்டு விட வேண்டும்.

***
இடைவேளை வந்ததுமே கயல்விழியை மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். பரஸ்பர அறிமுகங்கள், மெல்லிய சிரிப்பொலிகள், பிரமிப்பு, கொஞ்சம் பொறாமை இவையனைத்திற்கும் இடையே கயல்விழி தீர்க்கமான பார்வையுடனும், புன்சிரிப்புடனும் அனைவரையும் அனுசரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். மேதாவித்தனம், திமிர் துளியும் இல்லை. கண்களில் அப்படி ஒரு தீர்க்கம், பேச்சினில் அதற்கேற்ற தெளிவு. மாணவர் வட்டத்தின் விளிம்பில் ஐஸ்வர்யா பல நிமிடங்கள் தொங்கிக் கொண்டிருக்க, கயல்விழி தானாக முன்வந்து அவளுக்குக் கை கொடுத்தாள். 

"ஹாய்... ஐ ஆம் கயல்விழி..."

"ஹலோ. ஐ ஆம் ஆஷ்..."

"ஆஷ்?" 

"யா... ஐஸ்வர்யா"

"ஓ... நைஸ் மீட்டிங் யூ ஐஸ்வர்யா"

"டூ யூ ஸ்பீக்  தமிழ் அட் ஹோம்?" ஐஸ்வர்யா ஆர்வத்தை அடக்க முடியாமல் வினவினாள்.

"எஸ். டூ யூ?"

"யா"

"ரொம்ப சந்தோஷமா இருக்கு... யூ நோ... ஒரு தமிழ் பொண்ணு கூட படிக்கிறது" கயல்விழி குரலில் நிஜமான ஆனந்தம் பிரதிபலித்தது. நல்ல சரளமான தமிழுக்கு சாதாரணமாய் மாறினாள்.

"எனக்கும்..." தன் மனதை வதைக்கும் கேள்வியை நேரடியாய்க் கேட்டால் தவறாக நினைத்து விடுவாளோ என்ற குழப்பத்தில் ஐஸ்வர்யா வழிந்தாள். "கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்?"

"தாராளமா..."

"இந்த விபூதி, பொட்டு... இதெல்லாம்... யாரும் கிண்டல் பண்ணலயா?" தயங்கித் தயங்கி கேட்டாள் ஐஸ்வர்யா.

இதைக் கேட்டு கயல்விழி  மெலிதாய்ச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் புரிதல், விரக்தி, அக்கறை அனைத்துமே சம அளவில் கலந்திருந்தன. "உன்னையும் கிண்டல் பண்ணாங்களா? ஹ்ம்ம். நாம இருக்குறது வெளிநாட்டில ஐஸ்வர்யா. இங்க நம்ம கலாச்சாரம் தெரியாது. தெரியாத விஷயத்த கிண்டல் பண்ணறது தான மனித இயல்பு?"

"உன்னையும் கிண்டல் பண்ணாங்களா? உனக்குக் கஷ்டமா இல்லையா?" ஐஸ்வர்யாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சும்மா நடிக்கிறாளோ?

"எதுக்கு? இது என் அடையாளம். என் கலாச்சாரம். இது மத்தவங்களுக்கு புரிஞ்சாலும் புரியாட்டியும் என்னோட ஒரு அங்கம் இது அண்ட் ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் இட், யூ நோ வாட் ஐ மீன்? நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலை?" புன்னகைத்தபடி சாதாரணமாய்க் கூறினாள்.

அந்த பதிலையும் கயல்விழி சிரிப்பையும் முழுதாய் கிரஹித்துக் கொள்ளும் முன் அடுத்த வகுப்புக்கான மணி அடிக்க, இருவரும் தத்தம் இருக்கைக்குச் செல்ல நேர்ந்தது.

ஐஸ்வர்யாவால் கயல்விழி கூறியதை முழுமையாய் ஏற்க முடியவில்லை. கொஞ்சம் பேர் வாங்கிட்டா போதும். உலகத்தயே கரைச்சு குடிச்சா மாதிரி பேசுறது. உன்ன டேக் பண்ணிருக்கணும். தட்டி விட்டு ஓடிருக்கணும். விரட்டி விரட்டி அழ விட்டிருக்கணும். அப்போ தெரிஞ்சுருக்கும். கயல்விழிங்கற பேரை கே னு மாத்திட்டு என் பக்கத்து சீட்டுல தான் பெக்கே -பெக்கேன்னு முழிசிச்சுட்டு உக்காந்துருப்ப. 'நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலைன்னு' தத்துவம் பேசியிருக்க மாட்ட. ஹ்ம்ம். லேசாய் முகம் சுழித்து கயல்விழியை பார்க்க எத்தனிக்கையில் தான் அவளுக்குத் தெரிந்தது கயல்விழி அவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருப்பது. சட்டென ஒளிந்து கொண்டாள். ச்சே... சொதப்பல்!

பள்ளி முதல்வர் ஆண்டிரூஸ் முகத்தில் பெரிய புன்னகையுடன் உள்ளே நுழைந்தார். சம்பிரதாய "குட் மார்னிங் மிஸ்டர் ஆண்டிரூஸ்" ரீங்காரித்து ஓய்ந்த பின் ஓரிரு நிமிடம் மாணவர்களை தீர்க்கமாய்ப் பார்த்து விட்டு ஆங்கிலத்தில் தன் உரையை தொடங்கினார். "உயர்நிலைப் பள்ளி என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பகுதி. தொடக்கப் பள்ளியிலும் வளர்நிலைப் பள்ளியிலும் நீங்கள் பெற்றது அறிவைத் தேடத் தேவையான கருவிகள். மொழி, அடிப்படைக்  கணிதம், அறிவியல் பற்றிய புரிதல், சக மாணவர்களையும் மனிதர்களையும் புரிந்து அனுசரித்து நடத்தல், நல்லொழுக்கம் உள்ளிட்ட இந்தக் கருவிகள் இந்த ஆண்டில் இருந்து அடுத்த கட்ட அறிவையும் புரிதலையும் பெற உங்களுக்கு உதவப் போகின்றன. அதற்குண்டான எல்லா வித உதவிகளையும் முயற்சியும் இந்தப் பள்ளியும் ஆசிரியர்களாகிய நாங்களும் செய்ய கடமை பட்டிருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து உங்களுள் ஒருவரும் இந்த அறிவுத் தேடலில் உடனிருந்து உதவி செய்யப் போகிறார் - கயல்விளி."

ஐஸ்வர்யாவிற்கு ரவரவ என்று வந்தது. போச்சுடா! மறுபடியும் கயல்விழி அஷ்டோத்திரம். என் தலை விதி!

முதல்வர் ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். "பொதுவாக ஒரு மாணவரின் புகழைப் பாடிக் கொண்டே இருந்தால் அது மற்ற மாணவர்களுக்கு வெறுப்பை உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது. அதையும் மீறி நான் ஒரு மாணவரை மட்டும் சுட்டிக் காட்டி பேசிக் காரணம் அவர் அடைந்த வெற்றிகள் மட்டுமல்ல. வெற்றிகளை புரிந்து கொள்வது எளிது. ஏனென்றால் நாம் அனைவருமே முனைவது அதற்குத் தான், கோருவது அதைத் தான். ஆனால் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் இருக்கக் கூடிய வலிகளும், அந்த வலிகளை மீறிய விடா முயற்சியும், அந்த விடா முயற்சியினால் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளும் அவப்பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்து கொள்வதில் யாரும் அக்கறை காட்டுவதும் இல்லை."

என்ன பெரிய வலி. அது என்னை மாதிரி நொந்து போய் பேரை மாத்திட்டு ஓரமா உக்காந்துருக்குறவங்களுக்குத் தான் தெரியும் ஐஸ்வர்யாவிற்கு மனது ஒப்பவில்லை.

இவளது எண்ண ஓட்டம் புரிந்தது போல் முதல்வர் பேச்சு இருந்தது. "கயல்விளி உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பல பெரிய அரங்குகளில் பெற்ற வெற்றிகள், புகழ், தெளிவான சிந்தனை, வயதுக்கு மீறிய பக்குவம், அடக்கம் என்று ஒரு உதாரணமாய் உங்கள் முன் நிற்கும் கயல்விளியை உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலிருந்தே நிறத்தினாலும், கலாச்சார வேறுபாட்டினாலும் சக மாணவர்களால் மீண்டும் மீண்டும் நோகடிக்கப் பட்டு, அதே சமயத்தில் அவளது அன்னையும் தவறி விட, இதே கயல்விளி தீவிர மன அழுத்தம் காரணமாக ஒரு ஆண்டு மருத்துவமனையில் இருந்ததும், மூன்றாண்டுகள் வீட்டிலிருந்து கல்வி பயின்றதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவும் நடந்த பின் தந்தையின் உதவியுடன் மெல்ல மெல்ல மீண்டெழுந்து இன்று உங்கள் முன் வெற்றியாளராக நிற்பது தான் விதிவிலக்காய் கயல்விளியை நான் உதாரணம் காட்டும் காரணம்."

வகுப்பே நிசப்தமாய் இருக்க ஐஸ்வர்யாவின் மனதிலோ கயல்விழியின் குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இது என் அடையாளம். என் கலாச்சாரம். இது மத்தவங்களுக்கு புரிஞ்சாலும் புரியாட்டியும் என்னோட ஒரு அங்கம் இது அண்ட் ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் இட், யூ நோ வாட் ஐ மீன்? நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலை? இவ்வளவு பிரச்சனைக்கப்பறம் இவ்வளவு தெளிவா யோசிகிச்சு பேச முடியுமா? எப்பிடி கயல்விழி? சிந்தித்த வண்ணம் கயல்விழியை ஐஸ்வர்யாவின் கண்கள் தேட கயல்விழி தாங்க மாட்டாமல் உடைந்து கைக்குட்டையில் முகம் புதைத்து சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள். அழாத கயல்விழி. ப்ளீஸ். அழாத. கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் துளிர்த்திருந்தது. கயல்விழியின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சி மிகப்பெரிய மரியாதையாய் மாறியிருந்தது.

அனைவரின் மனத்திலும் சோகத்தின் கனம் அழுத்திக் கொண்டிருக்க முதல்வர் தெளிவாக, அழுத்தமாக அவரது உரையின் முடிவிற்கு வந்தார். "இவ்வளவு வெற்றிக்குப் பின்னும் கயல்விளியின் தந்தை நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளை நம் பள்ளியில் சேர்க்கும் பொழுதே இந்த விவரங்களைக் கூறி மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி உணர்ச்சிகரமாய் வேண்டினார். எங்கள் பள்ளி மாணவர்கள் நிச்சயம் உங்கள் மகளுக்கு துணையாய் நிற்பார்கள் என்று உங்கள் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையில் அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை காப்பாற்றுவீர்கள் என்றும் நம்புகிறேன். இதை நீங்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவரிடமும் கயல்விளியிடமும் அனுமதி பெற்று உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். என் அருமைப் பிள்ளைகளே... சக மாணவர்களிடம் பாகுபாடு இன்றிப் பழகுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். நல்ல மனிதர்களாக இருப்பது தான் நம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு. நல்ல குணமே உங்களுக்கு நல்ல எண்ணங்களைத் தரும். நல்ல எண்ணங்கள் உங்களை பெரிய இலக்குகளை நோக்கிக் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை. அந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் பொழுது தோல்விகள் வரலாம். ஏமாற்றங்கள் வரலாம். துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சியுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். மீண்டும் இந்தப் பள்ளியின் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன். உங்கள் இலட்சியங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள். நன்றி!"

அதன் பிறகு கயல்விழி அனுமதி பெற்று சீக்கிரமே வீடு சென்று விட்டதால் அவளுடன் பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் அன்று முழுவதும் ஐஸ்வர்யாவின் மனதில் கயல்விழி மட்டுமே நிறைந்திருந்தாள். வகுப்புகள் முடிந்ததும் அவள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வருகையில் அவளுக்காக அம்மா அம்மாவுக்கே உரிய அன்புடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்தாள்.

"ஐஷு மா... எப்பிடிடா இருந்தது முதல் நாள்?" வாஞ்சையாய் தலை கோதியபடி கேட்டாள்.

ஐஸ்வர்யாவிற்கு கதவை படார் என அடித்துச் சாத்தியது நினைவுக்கு வர உணர்வுகளின் பாரம் தாங்காமல் அம்மாவை கட்டிக் கொண்டாள். கண்களின் ஓரம் லேசாகக் கண்ணீர் துளிர்த்திருந்தது.
"சாரி மா..."

"சேச்சே... அம்மா தாண்டா உன்கிட்ட சாரி சொல்லணும். இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும்ன்னு நெனச்சு நெனச்சே உன்ன ரொம்ப புஷ் பண்ணிட்டேன்ல? இனிமே நான் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்... சாரி டா..."

அம்மா கூறியது இன்னும் நெஞ்சைப் பிசைய அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, அவள் மார்புக் கூட்டின் கதகதப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தபடி ஐஸ்வர்யா "அம்மா..." என்றழைத்தாள்.

"ஹ்ம்ம்... சொல்லுடா" அம்மா அவள் தலை கோதியபடி கேட்டாள் 

இரண்டொரு நிமிட இடைவேளைக்குப் பின் ஐஸ்வர்யா மெல்லமாய்க் கேட்டாள் "பொட்டு வைச்சா நான் நெஜம்மா மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கேனா?" 

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசாட்சி

பேசாத சொற்களின் அர்த்தம்
நீ மட்டும் உணர்ந்திடுவாய்  நித்தம்
காண்பதே கடினம் என்றாலும்
காணும் காட்சியெல்லாம் உந்தன் கோலம்
நித்திரையில் வேற்றுலகம் காண்பித்தாய்
நீளும் நாட்களிலே சிந்தை நிறைத்திட்டாய்
எனை விடவும் என்னை நீ நன்கறிந்து
நான் என்றால் நீயும் என்றாகிவிட்டாய்

திங்கள், 24 ஏப்ரல், 2017

தீபாவளி

புதியதாய் வெளிநாடு வரும் மாமாக்களும் மாமிக்களுக்கும்  போன் உபயோகிக்கக் கூடாது என சட்டம் வர வேண்டும். விடிந்ததும் விடியாததுமாய் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல கிழக்கு கடற்கரை (அதாங்க ஈஸ்ட் கோஸ்ட் ) வந்திருக்கும் மனைவியின் மாமா திருவாளர் சுப்ரமணியன் அழைத்ததில் தூக்கம் தொலைத்து ஹாலில் ஜன்னலருகே நின்று கொண்டிருக்கிறேன். பிட்ஸ்பர்கில் காலை மணி 6:30 ஆகி விட்டது. ஆனால் இங்கு சியாட்டிலில் அர்த்த ராத்திரி 3:30 மணி, முப்பத்தி எட்டு பாரெண்ஹெய்ட் (ஏறத்தாழ மூன்று டிகிரி செல்ஸியஸ்), பற்றாத குறைக்கு சியாட்டிலின் அடையாளமான நச நச மழை ஜன்னல் கண்ணாடியில் கோடு கிறுக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் விட பிரமாதமான விஷயம் என் மனைவி - கொடுத்து வைத்த கும்பகர்ணி - கால் வந்தது கூட தெரியாமால் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறாள். மொத்தத்தில் ஒரு என்ன கொடுமை சார் இது தொடக்கம் இன்றைக்கு.


ஹ்ம்ம்... ஐ போனை எழுப்பி மணி பார்க்கிறேன். 3:40. கடைசியாக தீபாவளிக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்து சுமார் இருபது இருபத்தைந்து வருடங்கள் இருக்கும். நிசப்தமான இரவில் அரை நித்திரையில் மழையின் சட சட சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் என் நினைவுகளை பின்னோக்கி கொண்டு செல்கிறது. "இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால..." என்று க்ளீஷேவாக ஆரம்பித்தாலும் மலரும் நினைவுகளில் அழகிய மதுரையை நினைத்துப் பார்க்கையில், அதிலும் குறிப்பாய் பள்ளிப் பருவத்தில், தீபாவளிக் காலங்களில் ரசித்து ரசித்து உள்வாங்கிய நினைவுகளில் நிறைந்திருக்கும் மதுரையை நினைத்துப் பார்க்கையில் உள்ளூர மலரும் ஒரு இனம் புரியாத பரவசத்தை சுலபமாக உங்களுக்கு  புரியும்படி,  நீங்கள் உணரும்படி விவரித்து விட முடியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.


மதுரையின் மையப்புள்ளி மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். கோவிலை மையமாகக் கொண்ட செவ்வகங்களான ஆடி, சித்திரை, மாசி, வெளி வீதிகளும் அவற்றின் ஊடே இழையோடும் வீதிகளும் தெருக்களும் தான் மதுரை டவுண் டௌன் ஷாப்பிங் டிஸ்ட்ரிக்ட்.  பாண்டியர் காலத்திலேயே எக்ஸ்போர்ட் செய்து வந்ததாலோ என்பதாலோ என்னவோ அழகாக தொழில்வாரியாக திட்டமிடப்பட்ட சந்தை அது. தீபாவளி நெருங்க நெருங்க ஆங்காங்கே மதுரை மல்லிகை வாசம், பிளாஸ்டிக் பொம்மைகளின் டிகி டிகி சத்தம், கீழ மாசி வீதியில் பளீர் ட்யூப் லைட்டுகள் மின்னும் பட்டாசுக் கடைகள், சித்தநாதர் விபூதியும் சந்தனமும் மணக்கும் எழுகடல் தெரு, அன்னக்குழி மண்டபம் அருகே களை கட்டும் குற்றாலத் துண்டு வியாபாரம், புது மண்டபத்தில் தட தடக்கும் தையல் மெஷின்கள், சோடியம் வேப்பர் விளக்கொளியில் அம்மன் சன்னதியில் கலகலக்கும் வளையல்கள், கோவிலின் நான்கு புறமும் பரபரக்கும் ஜவுளி கடைகள், செவந்தியும் சம்பங்கியும் மல்லியும் அரளியும் வாடாமல்லியும் மரிக்கொழுந்தும் வந்து குவியும் பூ மார்க்கெட், எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் என அந்தச் சந்தை இன்னும் மெருகேறி ஜெகஜ்ஜோதியாய் மாறி விடும்.


இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் அனைவருக்கும் முகத்தில் புன்னகையும், நெற்றியில் திருநீறும் குங்குமமும், மனதில் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. மீனாட்சியின் அருள் எப்படி அனைவருக்கும் உண்டோ அதே போல் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அவரவர் சக்திக்கேற்ற பொருட்கள் அந்தச் சந்தையில் உண்டு. பணக்காரர்களுக்கு பிராண்டட் ஷர்ட் என்றால் ஏழைகளுக்கு குமார் ஷர்ட். நடுத்தர மக்களுக்கு அணில் மார்க் பட்டாசு என்றால் ஏழைகளுக்கு லேபிள் ஒட்டாத லோக்கல் தயாரிப்பு. இப்படி ஏதோ ஒரு வகையில் எல்லோரும் கைகள் நிறைந்து திரும்பும் நிறைவான ஷாப்பிங் எக்ஸ்பீரியன்சையும், மனது நிறைந்து திரும்பும் ஆத்மார்த்தமான ஆன்மீகத்தையும் காம்போ ஆஃபராய் நான்கு கிலோமீட்டர் பரப்பளவில் அளித்த பிரம்மாண்ட ஷாப்பிங் மால் அது.


மொட்டை மாடியிலிருந்து மீனாக்ஷி கோவில் கோபுரம் தெரியும் ஒரு குறுகிய அக்கிரகாரத்து காரை வீட்டில் குடியிருந்ததால் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் துணி வாங்க ஒவ்வொரு முறை, பட்டாசு வாங்க ஒருமுறை, தீபாவளி மருந்தும் பலகாரங்களும் வாங்க ஒருமுறை என பல அந்தி நேர நகர்வலங்களில் இந்த மாற்றங்களை உள்வாங்கி ரசித்திருக்கிறேன். ஷாப்பிங்கை பொறுத்த வரை நான் மூளையை கசக்கியது பட்டாசு விஷயத்தில் மட்டும் தான். நடுத்தர குடும்பங்களுக்கே உண்டான பட்ஜெட்டுகள் எங்கள் வீட்டிலும் உண்டு. பட்டாசுக்கான அப்பாவின் சராசரி நிதி ஒதுக்கீடு அந்த வருடத்தின் நிதி நிலைமைக்கேற்ப ஐநூறில் இருந்து ஆயிரம் ரூபாய். பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த சலுகையும் இல்லாத நிர்ணயிக்கப்பட்ட தொகை என்பதால் வருடங்கள் செல்லச் செல்ல திட்டமிடுதல் அதிகம் தேவைப்பட்டது. ஒரு நாள் முழுக்க பட்டாசு வெடிக்க வேண்டுமே, அதுவும் அணில் மார்க் பட்டாசுகள். நல்ல வேளையாக அதிக சத்தத்துடன் ஒன்றொன்றாக வெடிக்கும் அணுகுண்டு, காட்ரிட்ஜ் பாம் உள்ளிட்ட வெடிகள் உள்ளவற்றுள் மலிவானவை, என் தேவைகளுக்கு கச்சிதமானவை.  


ஜான் கீட்ஸ் ஒரு கவிதையில் குறிப்பிடுவார். நாம் கேட்காத, கற்பனை செய்து பார்க்கும் பாடல்கள் நாம் கேட்டு முடித்து விட்ட பாடல்களை விட இனிமையாய் இருக்கும் என்று. நம் மனது அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும் போது பல விதமாய் கற்பனை செய்யவும் முடியும், அந்தக் கற்பனைகள் நமக்குப் பிடித்த மாதிரியும் இருக்கும். அதே போல் வாங்கி வைத்து வெடிக்கக் காத்திருக்கும் பட்டாசும், வாங்கி வைத்து உடுத்தக் காத்திருக்கும் ஆடையும் அலாதி சுகத்தைக் கொடுத்தன - மற்றவரிடம் பெருமையாக காட்டிக் கொள்ளும் போதும், எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்கும் பொழுதும்.


தீபாவளி நாளன்று காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பூஜை முடியக் கூட காத்திருக்காமல் பழைய ஷார்ட்ஸ் ஒன்றை அவசர அவசரமாய் போட்டுக் கொண்டு ஒரு கையில் லட்சுமி வெடி பாக்கட்டும் மறு கையில் சன்னமாய் புகை கக்கும் சைக்கிள் ஊதுவத்தியும் எடுத்துக் கொண்டு முழு வேகத்தில் வாசலுக்கு ஓடியிருப்பேன். அந்தக் குறுகிய அக்கிரஹாரத்தில் முதலில் எதிரொலிக்கும் வேட்டுச் சத்தம் யாருடையது என்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் எப்பொழுதும் கடுமையான போட்டி இருக்கும். ஒரு மாதத்திற்கு பீத்திக் கொள்ளும் ஏகபோக உரிமை ஆயிற்றே. லேசில் விட்டு விட முடியுமா?


நான் முதலில் வெடித்தால் லட்சுமி வெடி, எதிர் வீட்டு பிரவீன் வெடித்தால் 100 வாலா சரவெடி, போஸ்ட்மாஸ்டர் மகன் சீனு வெடித்தால் டபிள் ஷாட், முருகன் ஸ்டார் அண்ணாச்சி மகன் தீபக் வெடித்தால் புல்லட் பாம் என்று சிக்னேச்சர் வெடிகள் முன்னமே முடிவு செய்திருப்போம். தவிர குளித்து முடித்து விட்டுத் தான் வெடிக்க வர வேண்டும், மூன்றரை மணிக்கு முன் வெடிக்கக் கூடாது என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் வேறு. மதுரை பாஷையில் சொன்னால் ஆட்டம்னா ஒரு வரைமுறை இருக்கணும்லண்ணே. முந்தைய இரவிலிருந்தே விட்டு விட்டுத் தூங்கி, அலாரம் ஒலிப்பதற்கு முன்னரே எழுந்து தயாராகி உடனே வெடிக்க வேண்டுமென்று திரியைக் கூட பிய்க்காமல் பற்ற வைத்த லட்சுமி வெடியின் சத்தம் காரைச் சுவர்களில் முட்டி தீபாவளியின் வரவேற்பு மணியாக கணீரென எதிரொலிக்கும் போது ஜிவ்வென்று தலைக்கேறும் வெற்றிக் களிப்பை பின்நாட்களில் பணமும் பதவி உயர்வும் கிடைத்த தருணங்களில் கூட உணர்ந்ததில்லை.


தனி ஆவர்தனமாக தொடங்கும் இந்த வெடிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி டப் டஸ் டும் சத்தங்கள் வீதியெங்கும் பரவி கூட்டுப் பிரார்த்தனையாக மாறிய பின் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கும்.  கொட்டாங்குச்சிக்குள், சாணிக்குள், கயிறு சுத்தி,  சேர்த்துத் திரித்து, பிரித்து மருந்தாக்கி கொழுத்தி, புஸ்ஸானால் மொத்தமாய் நெருப்பில் கொட்டி என சிவகாசி தொழிற்சாலைகளுக்கு அடுத்தபடியாக வெடி மருந்து அதிகப்படியாக அலசி ஆராயப்பட்ட இடம் எங்கள் வீதியாக இருக்கலாம். எங்கள் கால கட்டத்தில் வளர்ந்த ஒவ்வொரு சிறுவனும் அப்படித் தான் நினைத்திருப்பான். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் என் நண்பர்கள் வெவ்வேறு சமூகத் தட்டில் இருந்து வந்தவர்கள். அதில் சிலரால் நூறு ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்க முடியாது. கூலி வேலை செய்வதாலும் பட்டாசுகள் விலை மலிவாக இருக்கும் என்பதாலும் தீபாவளி அன்று காலை நாங்கள் போட்டியிட்டு வெடிக்கும் பொழுது தான் சிலர் கீழ மாசி வீதி சென்று பட்டாசே வாங்குவார்கள். அப்பொழுது கூட அவர்களால் ஒரு நாள் முழுக்க வெடிக்கும் அளவுக்கு பட்டாசுகள் வாங்க முடியாது. சீனுவின் அப்பாவால் கூட பெரிதாக பட்டாசு வாங்கித் தர முடியாது. பிரவீனின் அப்பா கஞ்சூஸ். அலுவலகத்தில் வரும் கிஃப்ட் பாக்ஸ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்து இவ்வளவு தான் என்று சொல்லி விடுவார். அநேக கிஃப்ட் பாக்ஸ்களில் 100 வாலா இருக்கும் என்பதால் தான் அவன் அதை தனக்கென சிக்னேச்சர் வெடியாக தேர்வே செய்தான். இவர்கள் அனைவருக்குமே மதியம் நெருங்க நெருங்க காலி டப்பாக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.யாருக்கும் குறை தெரியாமல் இருக்க மதியமானால் யாருடைய வெடி எது என்று தெரியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்து நாங்கள் ஒரு கும்பலாகத் தான் வெடித்துக் கொண்டிருப்பபோம். இதற்காகவே நான் பெரிதாக விரும்பாவிட்டாலும் எண்ணிக்கை அதிகம் இருக்கட்டும் என்று சீனி/யானை வெடி பாக்கட்டுகள் சில வாங்குவது வழக்கம்.


எத்தனை கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தாலும் தீபாவளி நாளிலும் இருபத்தி நான்கு மணிகள்  தானே. நாள் முழுக்க பட்டாசு வெடிக்க வேண்டும், அப்படியே ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும், சொந்தபந்தங்களை சந்திக்க வேண்டும், பலகாரங்களை கபளீகரம் செய்ய வேண்டும், கோவிலுக்குச் செல்ல வேண்டும், இது தவிர வீட்டில் ஏதாவது எடுபிடி வேலை சொன்னாலும் செய்ய வேண்டும். கடைசி ஐட்டத்தை சாய்சில் விட்டாலும் மற்றவை செய்தாக வேண்டுமே. அதனால் அன்றைய தினம் நான் எங்கு சென்றாலும் கையில் ஒரு பட்டாசுக் கலவை தாங்கிய பிளாஸ்டிக் பை இருக்கும். ஒரு சரம் வெடிக்கும் நேரத்தில் உள்ளே ஓடி பஜ்ஜியோ மனோஹரமோ சத்துமாவு லட்டோ கையில் கிடைத்ததை வாய் கொள்ளும் அளவுக்கு அடைத்துக் கொண்டு அம்மா திட்டுவதை (“கை கழுவிட்டு சாப்பிடேண்டா”) நேக்காய் காதில் விழாதது போல் சமாளித்து, அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆவதில் தொடங்கி, சொந்தங்களுடன் அப்பா அம்மா பேசிக் கொண்டிருக்கையில் நைசாக நழுவி சில குருவி வெடிக்களை வெடிப்பது வரை பிரதான குறிக்கோளான பட்டாசை மறக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் செய்வது தான் நான் கற்றுக் கொண்ட முதல் மல்டி டாஸ்கிங்.


பட்டாசை மீறி என்னை கட்டிப் போட்ட ஒரே விஷயம் ரஜினி. கோவிலுக்கு சென்றால் கூட வீடு திரும்பி வெடி மருந்து நுகர மனம் ஏங்கும். ஆனால் ரஜினி படம் என்றால் முழு கவனமும் திரையில் தான். முதல் நாள் படம் பார்ப்பதே ஒரு பெருமை என்றால் அதை நன்றாக கவனித்துப் பார்த்து அடுத்த சில நாட்களுக்கு, வாரங்களுக்கு படத்தில் வந்த வசனங்களையும், காட்சிகளையும் குறிப்பாக ரஜினியின் ஸ்டைலையும் மற்றவர்களுக்கு நடித்துக் காட்டுவது பரம சுகம். சில வருடங்கள் டிக்கட் கிடைக்காததாலோ, வீட்டில்  விருப்பம் இல்லாததாலோ படம் பார்க்க முடியாமல் போய் விடும். அந்த சமயங்களில் மற்ற நண்பர்களும் படம் பார்க்கவில்லை என்றால் நானே அந்த படத்திற்கு ஒரு உட்டாலக்கடி கதை தயார் செய்தோ, எனக்கு மட்டும் பரிச்சயமான வேறு ஒருவரிடம் கேட்டோ தயாராகி விடுவேன். பிறகென்ன தெரிந்ததும் தெரியாததும் கலந்து அடித்து விட வேண்டியது தான். குழந்தைத் தனமான அட்டென்க்ஷன் ஸீக்கிங் என்றாலும் அதை கும்பலாக சேர்ந்து பண்ணும் பொழுது அது நடைமுறை ஆகியிருந்தது - நம் ஜனநாயகத்தைப் போல.


இப்படியாக தீபாவளி என்பது எனக்கும் நண்பர்களுக்கும் ஒரு நாள் பண்டிகையாய் இருந்ததில்லை. இரண்டு மூன்று மாத திருவிழாவாகத் தான் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் தனித்து நின்று ஜெயிப்பதில் தொடங்கி திட்டமிடுதல், பகிர்தலில் இருக்கும் மகிழ்ச்சி, ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை ஒரு சேரச் செய்வது, பணத்தின் அருமை என பல வாழ்வியல் பாடங்களை மகிழ்ச்சி கலந்து கற்றுக் கொடுத்த ஒரு ஆசிரியராகக் கூட இருந்திருக்கிறது. இந்த காலத்துச் சிறுவர்களுக்கு இந்தியாவிலேயே இது போன்றதொரு சூழல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இங்கு பெரும்பாலும் தீபாவளி வேலை நாட்களில் வந்தால் அதைக் கொண்டாடுவதே வார இறுதியில் தான். இந்த முறை தப்பித் தவறி சனிக்கிழமையில் வந்து விட்டது. அப்படி இருக்க இங்கிருக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வளவு கற்றுக் கொடுத்து விட முடியும். மேலை நாடுகளில் வசிப்பதன் மூலம் நம் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறோமா பறிக்கிறோமா என்ற ஆழமான குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தும் நாட்களாகத் தான் இப்பொழுதெல்லாம் தீபாவளியும் ஏனைய பண்டிகைகளும் திகழ்கின்றன.

சரி… அறையில் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. தமிழ் சங்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இன்று என் மகள் நான் சிரித்தால் தீபாவளி பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் (தீபாவளி என்ற வார்த்தை வருவதால் மட்டுமே பாடலை தேர்வு செய்திருக்கிறார்கள்), என் மகன் வீர பாண்டிய கட்டபொம்மனாக மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்கிறான் (அவனே ஜாக்சன் துரை போல் தான் பேசிக் கொண்டு திரிகிறான்). அங்கிருந்து திரும்பியதும் பல்பம் சைஸ் கம்பி மத்தாப்பு நான்கை கொழுத்தி விட்டு க்ராண்ட் ஸ்வீட்ஸில் ஆர்டர் செய்த பலகாரங்களுடன் புவ்வா. நல்லதாய் நான்கு போட்டோக்கள் ஃபேஸ்புக்கில் ஏற்றி எங்கள் மகிழ்ச்சியை உலகுக்கே தெரியப்படுத்தி எட்டரை மணிக்கெல்லாம் சத்தமின்றி துயில்வோம். இப்பொழுது ஏற்பாட்டைத் தொடங்கினால் தான் நேரம் சரியாக இருக்கும். மீண்டும் ஒரு முறை இந்தியாவும் மதுரையும் நினைவுக்கு வருகையில் இன்னும் சற்று வயதானவனாக சந்திக்கிறேன். ஹாப்பி தீபாவளி.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

நீதி

எனக்கு இருட்டுன்னா பயம்... ஆனா... இப்போ நான் இருக்கிற ரூம்ல... கடுகளவு வெளிச்சம் கூட இல்லை... இப்போ என் கவலை... இருட்டை பத்தினதில்லை… சொல்ல போனா... இன்னைக்கு... இந்த நிமிஷம்... இருட்டு தான் என் நண்பன்... காரணம்... உயிர் பயம்... என்னை... சில பேர் கொல்ல தேடிட்டு இருக்காங்க… ஒரு நிமிஷம்… ஓடி வந்ததுல மூச்சு வாங்குது.

யாரு கொல்ல வர்றாங்கன்னு கேக்குறீங்களா? பரம்பரை பரம்பரையா எங்க கூட்டத்தை அடக்கி ஒடுக்கி சித்திரவதை செஞ்சு கொன்னுட்டு வர்ற அதே கும்பல் தான். காரணம் நாங்க அநாதைங்க. அதுலையும் அநாதை பெண்கள். கேக்கணுமா? நாங்க அனுபவிச்சதெல்லாம் நெனச்சு பாத்தா உடம்பே நடுங்குது. எப்பிடியும் நான் சாகுறது உறுதி.  அதுக்கு முன்னாடி நடந்த கொடுமைகளை சொல்லிட்டு போறேன். நீங்க எதாவது பண்ணுவீங்கங்குற நம்பிக்கையில்…

நாங்க வளர்ந்த ஊர் நாமக்கல். அநாதைங்களுக்கு வளந்த ஊர் தானே சொந்த ஊர் மாதிரி… இப்பிடி வாழ்றதுக்கு செத்துறலாம்ன்னு தினமும் தோண்ற வாழ்க்கை. ரொம்ப சின்ன வயசுலயே கொத்தடிமை ஆயிட்டோம். எங்களை பெத்தவங்க யாரு, ஏன் இப்பிடி எங்களை துச்சமா தூர போட்டாங்க… எதுவுமே தெரியாது. என்னை மாதிரி ஐநூறு அறுநூறு பேர். பச்சை குழந்தைங்கன்னு கூட பாக்காம கூட்டமா உள்ள தள்ளி விடுவாங்க. நெரிசல்ல ரெண்டு மூணு குழந்தைங்க செத்து கூட போயிட்டாங்க. அப்போ கூட நாங்க செத்ததை விட போட்ட காசு போச்சேன்னு தான் வருத்தப்பட்டாங்க எங்க “முதலாளி"கள். இது இப்பிடி இருக்க, நாங்க சாப்பிட்டது எப்படி தெரியுமா? ஒரு பெரிய கூண்டுக்குள்ள ஜெயில் மாதிரி அடச்சு தான் வச்சுருப்பாங்க எப்பவும். சாப்பாடு எங்க ஜெயில ஒட்டி வீசிட்டு போவாங்க. நாங்க கூண்டு வழியா எட்டினதை சாப்பிடணும். முரட்டுத் தனமா இருக்கற ஆளுங்க திடீர்ன்னு வந்து தூக்கி முடியெல்லாம் தடவிட்டு, எங்க உதட்டை வெட்டி காயப்படுத்திட்டு போவாங்க. அதிகமா சாப்பிட்டுற போறோம்னு. சத்தம் போட்டா கூட கேக்க நாதி இருக்கணுமே. அழுது அழுது ஒரு கட்டத்துல மரத்தே போச்சு.

இதெல்லாம் கூட பரவாயில்லை. வயசுக்கு வந்ததும் எங்களுக்கு கண்ட ஊசியை போட்டு உணர்ச்சியைத் தூண்டி எங்களை ஆண்களோட சேரவும் விடாம, கரு தரிக்கவும் விடாம கரு முட்டைகளை மட்டும் திருடி வித்துறுவாங்க. செயற்கை கருத்தரிப்பு, ஆராய்ச்சி ஒரு பக்கம்ன்னா,அதை சாப்பிட்டா வியாதியே வராது, ஆயுசு கூடும், உடம்பு நல்லா இருக்கும்ன்னு என்னென்னமோ காரணம் சொல்லி இரக்கமே இல்லாம வாங்கி சாப்பிடுற கும்பல் வேற இருக்குன்னு தெரிய வந்தப்போ நடுங்கிட்டோம். எங்க உடம்பு சளைக்கிற  வரைக்கும் இது தான் எங்க விதி. ஒரு கட்டத்துல இப்பிடி எடுத்து எடுத்து உடம்புல அப்பிடி ஒரு வலியும் களைப்பும் வந்துரும். சீக்கிரமே தளர்ந்து போய் கரு முட்டை வர்றது கூட நின்னப்பறம் எங்களை மறுபடியும் கும்பலா லாரிக்குள்ள ஏத்தி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இல்லை நம்ம மாநிலத்துலையே ஏதாவது ஊருக்கு அனுப்பி விட்டுருவாங்க. பசியே எடுக்காம இருக்க ஏதோ குடுத்து குடிக்க வேற சொல்லுவாங்க. வர்ற வழில வெயில் மழைன்னு எது வந்தாலும் ஒரு தார்ப்பாய் கூட கிடையாது. நாங்க உயிர் இல்லையே… பொருள் தானே! இதெல்லாம் போதாதுன்னு இப்போ ஒரு கொலைகார கும்பல் கிட்ட வந்து மாட்டிகிட்டோம். என் கண்ணு முன்னாடியே வெள்ளையம்மா அக்காவை கழுத்தை பிடிச்சு தூக்கி... கத்தியால ஒரே வெட்டு... துடி துடிச்சு முண்டமா கீழ விழுந்தாங்க. வெலவெலத்துப் போயிட்டோம். இத்தனைக்கும் எங்க கூட்டத்துலையே எப்பவும் சிரிச்சுட்டு, நல்ல வார்த்தை சொல்லிட்டு குண்டா அழகா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனசு விடாம இருக்கும் அந்த அக்கா. இப்போ பொணமா கெடக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எளவெடுத்த உசிரு மேல அப்பிடி ஒரு ஆசை, அது போயிடும்ன்னு பயம். எல்லாம் தலைக்கு ஏற ஒரே ஓட்டமா ஓடி இங்க வந்து… ஐயையோ அவங்க வந்துட்டாங்க… காப்பாத்துங்க… நான் வாழணும்… ப்ளீஸ்… காப்பாத்துங்… விடுடா… விடுடா என்னை… விட்.
(மடக் என ஓர் சத்தம், அதன் பின்னே ஒரே ஒரு விநாடி மயான அமைதி… திடீரென “மனிதன் மனிதன்” பாடல் பாடி கைபேசி அழைத்தது)

“ஆங். சொல்லுண்ணா”
“...”
“லோடு காலேலயே வந்திச்சுண்ணா. ஒரு கோயி ஓடி வந்து ஸ்டோர் ரூமாண்ட ஒய்ஜினிர்ந்தது. இப்போ தான் கய்த்த திருவுனேன். நான் பாத்துக்குரேண்ணா…”
“...”
“கொய்ந்தைக்கு இப்போ பரவால்லண்ணா… ஆட்டுக் கால் சூப்பு வச்சு குத்தா சம்சாரம்…”

(பேசியபடி அவன் கதவை மூடி நகர்ந்து செல்ல, அந்த கிடங்கில் அமைதியும் இருளும் மறுபடியும் சூழ்ந்தது)

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

யார் தமிழர்?

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு வாக்குறுதிப் பட்டியலை தயார் செய்து கொண்டு தங்களுக்கு சாதகமான சில உண்மைகளையும், பல பொய்களையும், எதிர்க் கட்சியினர் மேல் திகட்டத் திகட்ட புகார்களையும் மக்களின் முன்பு அடுக்கு மொழியிலோ, அநாகரீகமான வசைகளிலோ, வழக்குத் தமிழிலோ அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அவிழ்த்து விடும் நேரம் : தேர்தல்.

இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் பன்முனைப் போட்டியாக உருவாகி இருந்தாலும் பழம் (ஊழல்) பெருச்சாளிகள், ஜாதிக் கட்சிகள், "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க" என வீர வசனம் பேசும் கட்சிகளையெல்லாம் தாண்டி ஓரளவுக்கு அறிவுப்பூர்வமாய் யோசித்து, தெளிவான வாக்குறுதிகளுடன் களம் காணும் கட்சி இயக்குனர் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி. வேளான்மை மேம்பாடு, தன்னிறைவு, நகர் மேம்பாடு/திட்டமைப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தெளிவான சிந்தனைகளை முன்வைத்ததால் நிறையவே ஆர்வத்துடன் சீமானின் பேச்சுக்களையும், கட்சியின் பிரச்சாரங்களையும் கவனித்து வந்ததில் நான் புரிந்து கொண்ட விஷயம் - மேலோட்டமாய் நந்தவனம் போலே தோற்றமளித்தாலும் இந்தப் பாதையின் முடிவில் இருப்பது பேரழிவு மட்டும் தான். "புலி" போல் சீறிப் பாயும் முன் நான் சொல்லவிருக்கும் காரணங்களை முழுமையாகப் படித்து விடுங்கள்.

ஹிட்லர் பாதை

நாம் தமிழர் திருச்சி மாநாட்டில் 'வழிகாட்டிகள்' என்று தலைப்பிட்டு வைக்கப்பட்டிருந்த தட்டியில் முதன்மையாய் ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகக் கேள்வி. இது தெரிந்து வைக்கப் பட்டதா தெரியாமல் வைக்கப் பட்டதா தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் வாழ்வை 'வந்தேறிகள்' கெடுத்ததாய் கூறுவதில் தொடங்கி தமிழகம் நிகரற்ற, தன்னிறைவான சொர்க்கபுரி என்று பிரச்சாரம் செய்வது வரை நிஜமாகவே ஹிட்லரின் பாதையில் வெகு வேகமாய் பயணிக்கும் கட்சி இது தான். ஹிட்லரின் சுயசரிதையான 'மயின் காம்ப்' (Mein Kampf) முழுக்க வந்தேரிகளான யூதர்கள் ஜெர்மானியர்களின் வாழ்வைக் கெடுத்தது பற்றியும், ஜெர்மானியர்கள் உலகிலேயே சிறந்த இனம் என்பதற்கான 'சான்றுகளையும்' ஏராளமாகக் காணலாம். சரித்திரம் ஹிட்லரின் கோர முகத்தை மட்டுமே காட்டி நடுநிலை தவறியது உண்மையாய் இருந்தாலும் ஒற்றுமையாய் இருக்கும்/இருக்க முயற்சிக்கும் ஊரில் பிரிவினை பாராட்டத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப் போர் வரலாறே சான்று. நடக்கவிருப்பதன் முன்னோட்டமாக நாம் தமிழர் அமைப்பின் பால் தீவிர பற்று கொண்ட சிலர் தங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவ்ர்களை வந்தேறிகள் என்றும் தமிழ் தேசத் துரோகி என்றும் சமூக வலை தளங்களில் விமர்சிப்பதைக் காண முடிகிறது.

வன்முறை

பாரத பிரதமராய் இருந்தவர் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவருடன் சேர்ந்து பல அப்பாவித் தமிழர்களைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் உலகத் தமிழர்களின் தலைவராம், ஒருவரை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டாய் மாற்றி, அந்த நபர் மொழியின் பெயரால் தன்னோடு சேர்ந்து அப்பாவி உயிர்களை கோழைத் தனமாய் பலி வாங்குவது பெருமைப் பட வேண்டிய வீரச் செயலாம். தமிழனுக்கு வடிந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வடிந்தால் தக்காளிச் சட்னியா?  அட தமிழர்கள் எத்தனை பேரின் இரத்தம் விடுதலைப் புலிகலாளேயே சிந்தப் பட்டிருக்கும்? அதற்கு யார் பதில் சொல்வது? இராஜீவ் மீதோ, காங்கிரஸ் கட்சியின் மீதோ எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்தியாவைச் சுரண்டிச் சாகடித்தது காங்கிரஸ் தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் வெளிநாட்டு தீவிரவாத இயக்கம் இந்தியர் மீது நடத்திய தாக்குதலை இந்தியாவின் மீது நடந்த தாக்குதலாய் தான் பார்க்க வேண்டும்.

அதே போல் ஈழத் தமிழர்களை சகோதரர்களாக நினைப்பதில் தவறில்லை. அங்கு நடந்த கொடூரமான போர்க் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பதும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ காரணம் சொல்லி வன்முறையை நியாயப் படுத்தத் தொடங்கினால், அதை பெருமையாகக் கருதத் தொடங்கினால், பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நியாயம் கேட்கும் உரிமையை நாம் இழந்து விடுகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. மொழிக்காக உயிர் எடுப்பதும் உயிர் கொடுப்பதும் உங்களுக்கு நியாயமாகப் படுமேயானால் சாதி, மதம் என்று அவரவர்களுக்கு முக்கியமான விஷயங்களுக்காக வன்முறையில் இறங்குவது அவர்களுக்கும் நியாயமாகத் தானே படும்? 

தனித் தமிழகம்

தமிழகம் சட்ட ரீதியாய் தனி நாடாகிறதோ இல்லையோ கொள்கை ரீதியாய் முற்றிலும் தனித்து நிற்கும். நாம் தமிழரின் செயல்பாட்டு வரைவு தமிழகத்தை ஒரு தனி நாடாகத் தான் பார்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியா எனும் வார்த்தை அதில் இடம் பெறுகிறதா என்று கூடத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் அதிகாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியில் அந்த மாநிலத்தின் பங்கும் முக்கியம். வேற்றுமையால் ஒன்று பட்ட நம் நாட்டை வேற்றுமையாலேயே வேரறுக்கும் போக்கு ஒவ்வொரு மாநிலமும் தன்னை தனி தேசமாகக் கருதுவது. இலங்கையில் நடந்தது உரிமைப் போராய், ஒரு உள்நாட்டு சுதந்திர போராகக் கூட இருந்திருக்கலாம். அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் இலங்கையில் பிறந்து வளரவில்லை. ஆனால் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத இயக்கமாய் அறிவிக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரை தமிழக மக்களின் தலைவன் எனக் குறிப்பிடுவது இந்திய இரையான்மைக்கு எதிரான ஒரு செயல் என்று மட்டும் என்னால் அடித்துக் கூற முடியும்.


சுருங்கச் சொன்னால் கம்யூனிசப் போராளி போல் சிந்திக்க தமிழகம் சீனாவோ, ஈழமோ அல்ல என்பதை நினைவில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியையும் அதில் தமிழகம் ஆற்ற வேண்டிய பெரும் பங்கையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்கும் நல்லது. வாழ்க தமிழ். வளர்க இந்தியா.