செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கலைமாமணி

தமிழக கலை உலக பிரமுகர்களுக்கு நம் மாநிலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது என்று கலைமாமணியை கூறலாம்... எத்தனையோ கலை மேதைகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த விருது, இப்பொழுது இலவச தொலைக்காட்சிகளை போல் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் வழங்கப்படுவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய விஷயம். இம்முறை கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள் பட்டியலை சற்றே அலசி பார்ப்போம்...

தமிழ் எழுத்தாளர் மாதவன்; கவிஞர் சிற்பி; பாடகர் மகாராஜபுரம் ஸ்ரீனிவாசன்; ட்ரம்ஸ் சிவமணி; தவில் வித்வான் ராமநாதன்; பாரதனாட்டியக்கலைஞர்கள் சங்கீதா கபிலன், ஐஸ்வர்யா தனுஷ்; நடிகர்கள் பரத், பசுபதி, மீரா ஜாஸ்மின், நயன்தாரா, அசின்; இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்; கலை இயக்குனர் P.கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் சேரன்; வயலின் கலைஞர் எம்பார் கண்ணன்.

இதில் திரைத்துறை சாராதோரை பற்றி எனக்கு தெரியாது. தெரியாதவர்களின் திறமை குறித்து விமர்சிப்பதும் முறையாகாது. குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய பெயர்களில் சில - ஐஸ்வர்யா தனுஷ், மீரா ஜாஸ்மின், பரத், நயன்தாரா, அசின், ஹாரிஸ் ஜெயராஜ்... சூப்பர் ஸ்டாரின் மகள் என்பதை தவிர ஐஸ்வர்யாவுக்கு எந்த விதமான தகுதியும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை... மீரா ஜாஸ்மின் நல்ல நடிகை என்பதில் எனக்கு ஐயமில்லை... ஆனால் கலைமாமணி வழங்க அவர் என்ன செய்தார் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை... இதே விவாதம் அசினுக்கும், நயன்தாராவுக்கும் பொருந்தும். வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நடிகர்களில் பரத் ஒருவர்... ஆனால் அதற்குள் கலைமாமணி என்று அவரை அழைப்பது நிச்சயமாக பொருத்தமானது அல்ல. ஹாரிஸ் ஜெயராஜ்... இவரை பற்றி எனது ஆங்கில பதிவேட்டில் "காப்பி கேட்" என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்... அப்படி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பாரபட்சமின்றி மற்ற இசை தொகுப்புகளில் இருந்து 'திருடி' தன் சொந்த படைப்பை வெளியிடும் இவர் கலைமாமணியா?

பசுபதி போன்ற ஒரு நடிகரும், சேரன் போன்றதொரு இயக்குனரும், ட்ரம்ஸ் சிவமணி போன்றதொரு கலைஞரும் விருது வாங்கும் மேடையில், இவர்களுக்கும் சமமாக விருது வழங்கி கௌரவிக்கப்படுவது உண்மையான திறமைக்கும், கடின உழைப்புக்கும் நேரும் அவமானம் என்பதே ஏன் தாழ்மையான கருத்து! விருது வழங்கும் அளவுக்கு யாரும் ஏதும் செய்யவில்லை எனில் யாருக்கும் விருதே வழங்காமல் இருக்கலாம். உண்மையிலேயே ஒரு விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவருக்கு வழங்கப்படும் போது தான் அந்த விருதை பெறுபவருக்கும் பெருமை, அந்த விருதுக்கும் பெருமை...

திங்கள், 23 பிப்ரவரி, 2009

யார் ஜனநாயகவாதி?

இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியக்கொடி ஆங்காங்கே தென்பட்டது என்றே சொல்லலாம்... பொதுவாக மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த விழாவில், இந்த முறை இந்தியர்கள் விருதுகள் தந்து கௌரவிக்கப்பட்டது நிச்சயமாக நம் நாட்டிற்கு பெருமை என்பதில் ஐயமில்லை...

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தை சேர்ந்த இசை புயல் ரஹ்மான் இந்த முறை இரண்டு விருதுகள் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி சேர்த்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜனநாயகவாதிக்கும் நீ இது வரை பேசியதற்கும் சம்மந்தமே இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் உங்கள் எண்ணம் நூறு சதவிகிதம் சரி... நான் பேச வந்த விஷயம் ஆஸ்கார் விருதுகள் சம்மந்தப்பட்டது என்றதால் விருது பெற்றவர்களை பாராட்டி விட்டு ஆதங்கப்பகுதிக்கு வரலாம் என்றிருந்தேன். அவ்வளவே... :)

விருது வாங்கிய நம் இசை புயலுக்கு நமது மாண்புமிகு முதல்வர் தெரிவிக்கும் வாழ்த்து -

"I consider the awards won by Rahman as precious jewels in the crown of one of our own with pride. I join 100 crore Indians and six crore Tamils in showering flowers of appreciation with pure minds on this scion from a minority community"

ஒரு வாழ்த்து தெரிவிக்கப்படும் பொழுது கூட ஜாதி, மதம், இனம், சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினைவாத நோக்கத்தோடு வாழ்த்து கூறும் இவர் ஒரு பகுத்தறிவாளி, சீர்திருத்தவாதி, ஜனநாயகவாதி. இன்னும் ஒரு படி மேலே சென்று கூறினால் ரஹ்மான் பிறப்பினால் இஸ்லாமியர் அல்ல என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு உண்மை. அப்படி இருக்கும் பொழுது அதை ஒரு தனிப்பட்ட மேற்கோளாக காட்டுவதே அர்த்தமற்றது. தமிழக மக்கள் எதை கூறினாலும் அதை கிரகித்து கொள்ளும் சக்தி உடையவர்கள் அல்ல என்றே முடிவு செய்து விட்டார் போலும். அவர் முடிவை முற்றிலுமாய் ஆமோதிப்பதை போல் நாமும் அவர் கூறும் எந்த முன்னுக்கு பின் முரணான விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களின் 'எனக்கென்ன' மனப்பான்மையை புரிந்து கொண்டு அவதூறு பிரச்சாரங்களும், மதவாத அரசியலும் செய்பவன் ஜனநாயகவாதி என்று நாம் விளக்கம் எடுத்துக்கொண்டால் இன்றைய தேதிக்கு இவரை மிஞ்ச ஜனநாயகவாதி கிடையாது.

மன்னர் காலத்தில் தொடங்கி இன்று வரை நாம் நசுக்கப்படுவது பிரிவினைவாதம் எனும் மத யானையால் தான். சரித்திரம் தெரிந்திருந்தும், தார்மீகம் புரிந்திருந்தும் நாம் இந்த பிரிவினைவாதத்தை தூக்கி எரிந்து தேச முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்காததே வருத்தத்திற்குரிய விஷயம்!

சனி, 21 பிப்ரவரி, 2009

எது நீதி?

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனைகள் என்று சமூகவியல் பாடங்களில் காலம் காலமாக அச்சுகள் மாறியும், மாறாமல் தொடரும் பட்டியல் ஒன்று உண்டு. ஜனத்தொகை பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை என்று நீளும் அந்த பட்டியல் நடைமுறைக்கேற்ப மாற்றப்பட்டதும் இல்லை. மாற்றப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை... கல்வித்தரம் சம்மந்தப்பட்ட என் ஆதங்கத்தை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு கூற வந்த விஷயத்தை கூறி விடுகிறேன்...

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனை எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதிலளிப்பீர்கள்? மக்கள் தொகை? சீர் கெட்ட அரசியல்? ஐ.டி? (சிலர் இதை கூட சமூக பிரச்சனையாகவே கருதுகிறார்கள் :)) இவை அனைத்தையும் மீறிய ஒன்று இருக்கிறது - நீதி. "காலத்தாற் செய்த உதவி" என்ற வள்ளுவரின் கூற்று உதவிக்கு பொருந்துவதை விட நீதிக்கு இரண்டு மடங்கு பொருந்தும், பொருந்த வேண்டும். ஒரு அநீதி இழைக்கப்படுகையில் அதன் தண்டனை கடுமையானதாகவும், உடனடியாகவும் இருந்தால் அந்த குற்றம் மறுபடியும் நடக்க கூடிய வாய்ப்பு பன்மடங்கு குறைகிறது. அதே தண்டனை இழுத்தடிக்கப்பட்டு, வழக்கு வலுவிழந்து, வழக்கு நடத்துபவன் உருவிழந்து தவிக்கும் வரை நடந்தால் அங்கு வழங்கப்படுவது நீதியும் அல்ல, அதை வழுங்கவது ஒரு நீதி மன்றமும் அல்ல. மேலை நாடுகளில் மக்கள் விழிப்புணர்வு அதிகம், சராசரி குடிமகனின் சமூக அக்கறை அதிகம் என்றெல்லாம் கருத்துகள் நிலவினாலும் உண்மை காரணம் அவைகளல்ல. பயம்... தண்டனை பயம். ஒரு வழக்கு நீதி மன்றங்களுக்கு செல்லுமேயானால் அந்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிந்தாக வேண்டும். அதே போல் ஒரு சிறிய சாலை விதிமுறை மீறலில் தொடங்கி அனைத்து குற்றத்திற்கும் உடனடியாய் தண்டனை வழங்கப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பே மக்களின் தேர்ந்த நடத்தையாகவும், சமூக பொறுப்பாகவும் வெளியுலகிற்கு தெரிய வருகிறது.

இது இந்தியாவில் நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா? சற்றே சிந்தித்து பார்ப்போம்... முதல் தடங்கல் - சீர்கெட்ட அரசியல். அரசியல்வாதிகளே சட்டம் இயற்றுகிறார்கள்... அவர்களே அதை மீறவும் செய்கிறார்கள்... ஆகையால் மிகக்கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படுவது அரிதினும் அரிது. அப்படியென்றால் அரசியல் தானே முழு முதல் சமுதாய பிரச்சனையாக கருதப்பட வேண்டும்? இல்லை... ஏனென்று தொடர்ந்து பாருங்கள். இரண்டாம் தடங்கல் - நீதிபதிகள்/வழக்கறிஞர்கள். ஒரு அரசியல்வாதி தவறு செய்பவனாக இருந்து வக்கீல்களும், நீதிபதிகளும் நீதியை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தால், அந்த அரசியல்வாதி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நியாயமில்லை. ஆனால் இதுவாவது நடைமுறைக்கு சாத்தியமானதா என்றால் சாத்தியமே... ஆனால் நிச்சயமாய் அதை நோக்கி நாம் பயணிக்கவில்லை. நீதிமன்றத்தினுள் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்ட அறிஞர் மற்றும் சட்ட பேராசிரியரான சுப்ரமணிய சுவாமி நீதிமன்ற வளாகத்தினுள் சக வழக்கறிஞர்களால் தாக்கப்படுகிறார். அதை செய்த வழக்கறிஞர்களை கைது செய்ய வந்த போலீஸார் மீது கல் வீச்சு... சட்டக்கல்லூரியில் ஜாதி வெறி தாண்டவமாடி ஒரு மாணவனை சக மாணவர்கள் போலீஸார் முன் இரும்பு தடிகளால் அடித்து சிதைக்கின்றனர். இவர்களா நாளைய வழக்கறிஞர்கள், நீதிபதிகள்? நீதியை நிலை நாட்ட ஒரு குற்றவாளி? இதுவல்லவோ ஜனநாயகம்!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நரமாமிசபட்சணி

ருசி அறியாப்பசி தீர்க்க
நிசி தோற்கும் நெஞ்சங்கொண்டு
தொப்புள் கொடியறுத்துத்தின்பவன் மனிதனோ
மொட்டில் உயிரிழக்கச்செய்வதும் மனிதமோ!

பனிப்பெண்ணே வருக!

தூய்மையின் இலக்கணமே தூய வெண்பனித்துளியே
சில்லிடும் சித்திரமே சிலிர்க்கும் நீரோவியமே
மௌனமாய் பொழிபவளே மென்மையின் மறுபெயரே
ஆண்டிரண்டு காக்கவைத்து அரவணைத்த அதிசயமே
உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும்
உணர்வில் குளிர்ச்சி உடம்பிலோ குளிர்
நீயிருக்கும் இடமறிந்தும் மெய்வருடும் நொடியறிந்தும்
உனை நாட மனமில்லை நடுங்குமெனுடலுக்கு
வெள்ளிச்சிதறலே வெப்பமறுத்துக்கொல்பவளே
மனதிற்கினியவளே மந்தம் புகுப்பவளே
மாயக்கண்ணனவன் மனதிலென்ன கொண்டானோ
மதுரமும் விஷமும் எதிலும் உண்டென்றானோ?

இலையுதிர் காலம்!

குங்குமச்சிகப்பில் கோலமிடும் மஞ்சள்
வரப்போகும் பட்டினியால் ஓலமிடும் உயிர்கள்
இலையுதிர் காலம்!

ஏமாற்றம்

நான்கே மனிதரும் நாலாயிரம் கொசுக்களும் சாட்சி கூண்டிலிருக்க
விநாடி முள்ளுடன் பொருமையிற்போட்டி...
தோல்வியும் விரும்ப முடியா விருப்பமற்ற போட்டியில்
நோகக்காரணங்களையும் பழிக்க மனிதர்களையும்
சோகக்கோலம் பூண்டு தேடுமென் மனதும்
தோற்று பழக்கமற்ற இறுமாப்பில் விநாடி முள்ளும்...

தாயகத்திலிருப்பதுணர்த்த ஈராயிரம் காரணமிருந்தும்
துவாரபாலகர்கள் ஏனோ இன்முகம் காட்டவில்லை
உட்கார வசதி மறுத்த சர்வதேச விமான நிலையமும்
உறக்கம் மறக்க உற்சாக பானமுண்ட ஓட்டுனனும்
உறக்கத்திற்கு காவலை காவு கொடுத்த காவலாளிகளும்
உலகத்தை சுருக்க உள்ளங்கை சுருக்கிய இரயில்துறையும்
உள்ளந்நிறை உற்சாகத்தை உருவின்றி சிதைத்து விட
போட்டியிடத்தான் செய்கிறோம்...
விநாடிகளை நினைவுகளால் தள்ளும் நானும்
விநாடியின் விளக்கம் மறவா விநாடி முள்ளும்!

தனிமைக்கவிதை

கவி படைக்க அமைதி தேடி
மனித வாடை முற்றும் மறந்து
அமைதி தனையே அணியாய் பூண்டு
சிந்தனைக்கு வடிவளித்து சிற்பமாக்க முனைந்தேன்...

ஜகத்தின் அமைதிக்குஞ்சேர்த்து அகத்தின் ஓலமொலிக்க
அர்த்தமற்று வாழும் எனைக்கண்டது நகைக்க
விதேசத்திலமர்ந்து விண்ணை வெறித்த கண்களுள்
பூமிப்பந்தின் மறுபுறமிருக்கும் தாயுந்தாய் நாடும்...

தாக்கத்தை வெளிப்படுத்த தன்னந்தனியே வந்தமர்ந்து
தனிமையுணர்ந்து தனிமயாலேயே தாக்கப்பட்டுத்திரும்புகையில்
கவியெழுதும் முயற்சி வெல்லத்தான் செய்ததுகண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாய்... கண்ணீர்ச்சிதரல்கள் கவிதைகளாய்!

கடற்கரை

அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...
கால்கள் இரண்டே ஆயினும்
அவை எனதே ஆயினும்
வண்ணத்து பூச்சி கொண்ட
வண்ண திட்டுக்களென தடங்கள்!
ஒரு பூச்சி இறகுறைந்தும்
ஒவ்வொன்றும் ஓர் கவிதை
சோகத்தில் சொந்தங்கள் சிரித்த அடி
மகிழ்ச்சியில் நடை மறந்த அடி
மங்கையர் பார்க்க மன்மதனென ஓரடி
பரபரப்பில் எனை மறந்த நூறடி
அடி மேல் அடி தொடர்ந்தும்
அடி மேல் அடி வைத்தேன்
அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...

உலகப்பொதுமறை!

மனிதம் கொன்று
மனிதர் வளர்த்தல் வேண்டுமோ?
மனிதம் கொன்றவனை
மனிதனென்றும் அழைத்தல் வேண்டுமோ?

குண்டு வெடிப்பு!

மக்கள் நிறைந்த ரயில்கள்
சந்தர்ப்பவாதிகளின் சந்தோஷம்
மனிதத்தின் மரணம்!

காதலர் தினம்!

ஆயிரம் மைல்கள் கடந்திருக்கும் கணவன்...
அறிமுகமில்லா இளைஞன் வீடேறி பூங்கொத்தளித்தான்...
காதலர் தினம்!

கவியுரையாடல்

கே: காற்றை கண்டதும் ஓடையின் முகத்தில் ஏன் இவ்வளவு சுருக்கங்கள்?

ப: இதழ் வருடும் மாயக்காதலனை காண இயலாக்கோபமோ சோகமோ
வானெங்கும் உள்ளக்கள்வன் ஓடித்திரிகையில் சிறைப்பட்ட இயலாமயோ சிந்தனையோ!

வல்லுனன்

வரவுகளின் பால் காதல் கொண்டு
உறவுகளின் அருமை மறந்து - உடல்
நலம் கெடுத்து, புறம் பெருத்து
தலம் மறந்து வாழ்பவன் வல்லுனனோ!

பொன் செய் மனத்துடை அகமகிழ்ந்து
தன் சுற்றம் கிட்டமர்த்தி - மகிழ்ச்சி
பொங்கும் வாழ்வுடை மாந்தன் இழியவனோ
தங்கும் உயிரற்ற காகிதம் அளவிற்குறைந்ததால்!

அமெரிக்கா!

நிலை குத்தி சிந்தனையில் ஆழ்ந்த கண்கள்...
கணிணியின் துல்லியத்தில் மனம் வருடும் இசைஞானி...
அமெரிக்கா!

புதுமைப்பெண்

பட்டாடை சரசரக்க
பயிர்ப்போங்கி பதம் பார்த்த
பாரம்பரிய பதுமைகளாம் பாரதப்பெண்கள்...
போதையில் புகை சூழ
ஆடவர் புடை சூழ
ஆடல் பாடலென்ற பெயரில்
பாதகம் செய்வதை காண
நல்ல வேளை புரட்சிக்கவி இப்புவியிலில்லை!

வெறுமை...

சொந்தக்களுக்காக கவலை பெற்று
சுகமாய் வாழ பணம் தேடி
சிந்திக்க இடமில்லா வேகம் பூண்டு
சிரிப்பு மறந்த முகங்கள் கண்டு
பெற்றதும் தேடியதும்
பூண்டதும் கண்டதும்
அமைதி கொன்றதாயுறைத்தான்...
அமைதியின் தீவிரம் மறக்க
அவசரத்தின் உதவி நாடியவன்!

தேடல்

மெல்லிசையை பிரசவித்து
பரவசத்தில் கண்ணீர் மல்கி
இலை வருடும் காற்றாய்
தனை வருடிய உன் நினைவை
மௌன மொழியினில் பறைசாற்றியது
தந்தி அறுந்த வீணை!

கருமி

பனி போர்த்திய இளவெயில்
பசுமை படர்ந்த புல்வெளி
முடிவிலியாய் தொடரும் தார்ச்சாலை
இராகம் பயிலா கானக்குயில்கள்
அனைத்தும் அருளினும் 'நீ' கருமியே
இரசித்து மகிழ நேரம் அருளாததால்!

புத்தாண்டு

கிட்டத்தட்ட முழுவதுமாய் காலி ஆகி விட்டிருந்த அந்த அலுவலக வளாகத்தினுள் ப்ரீத்தியின் பேச்சுக்குரல் மட்டுமே நிசப்தத்திரையை கிழித்துக்கொண்டிருந்தது.
"ஒ.கே சார். இந்த வாரத்துக்குள்ள முடிக்க ட்ரை பண்ணறேன். அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்..." பெருமூச்சுடன் தொலைபேசியை துண்டித்து விட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள். வருடத்தின் கடைசி நாளில் கணினிக்குள் அடைபட்டுக்கிடப்பதும், அதை உறுதி செய்ய தொலைபேசியில் அழைத்த மேலாளரும் எரிச்சல் மூட்டினாலும், அதை விட பெரிய பாரமொன்று அவள் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. மறுதினம் பிறக்கவிருந்தது புத்தாண்டு மட்டும் அல்ல, ப்ரீத்தியின் இருபத்தி நான்காம் வயதும் தான். எப்பொழுதும் இந்நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வலம் வருபவள் முகத்தில் இம்முறை சோக ரேகைகள் மட்டுமே இழையோடின. அமெரிக்க வாழ்வின் தனிமை நன்றாகவே பழகி இருந்தும் ஊரே ஆரவாரமாய் கொண்டாடும் தன் பிறந்த நாளில் தனித்திருப்பதை ஏனோ அவள் மனம் ஏற்கவில்லை.

"ஆதி கூட விட்டுட்டு போயிட்டானே" என்பதே அவளது பிரதான கவலை. வருட இறுதியில் விடுமுறையில் செல்வது அமெரிக்கர்களுக்கோ அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கோ புதிதல்ல என்ற போதும் ஆதி அவளை தனியே விட்டுச்சென்றதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆதி - ஆறு மாதங்களுக்கு முன் ப்ரீத்தி அமெரிக்கா வந்த போது சூழ்நிலை காரணமாய் அவனுடன் தங்க வேண்டிய கட்டாயம். காலப்போக்கில் அந்தக்கட்டாயம் இவளுக்குள் காதலாய் பூத்திருந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளாத போதும் இருவருக்குமே தெரிந்த ரகசியம் அது. "யார் எப்பிடி போனா எனக்கென்ன... நான் சந்தோஷமா தான் இருப்பேன். இன்னைக்கி இளையராஜா பாட்டு கேப்பேன். நல்லா சமைச்சு சாப்பிடுவேன்... அடுத்த வருஷம் என்னல்லாம் பண்ணனும்னு யோசிப்பேன்... ஆனாலும் ஆதி இப்பிடி பண்ணிருக்கக்கூடாது..." எங்கு சுற்றியும் அவள் மனது அந்த வாக்கியத்தை மட்டும் தாயைத்தேடும் குழந்தை போல் மறக்க மறுத்தது. வேண்டா வெறுப்பாய் வீடு வந்தவளுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னது கதவு இப்பிடி திறந்திருக்கு... ஆதி கூட ஊர்ல இல்லையே... ஐயய்யோ" என்று பதட்டமாய் உள்ளே நுழைந்தவள், காற்றில் கருப்பு மை கலந்தது போன்ற இருட்டில் கைகளை சுவற்றில் படர விட்டு விளக்கை உயிர்ப்பித்தாள். கூடத்தின் நடுவில் கேக் சகிதமாய் உட்கார்ந்திருந்த ஆதியை கண்டு சற்றே திருக்கிட்டவள் "ஆதி... நீ என்னடா பண்ணற இங்க" எனக்கேட்டாள். "உன்ன விட்டுட்டு போயிட்டேன் னு நம்பிட்டல்ல" குறும்பாய் கண்ணடித்து சிரித்த அவனிடம் ப்ரீத்தி "நீ ஒண்ணும் என் கூட பேச வேணாம் போ" என பொய்க்கோபம் காட்டினாலும், அவள் கண்ணோரத்தில் சாகசம் செய்து விழாமல் தப்பிய கண்ணீர் முத்து உண்மையை உரக்கக்கூறியது.

மெல்லத்திறந்தது கதவு

மறையத்தொடங்கிய ஆதவனின் பொன்னிறக்கதிர்கள் முயன்றும் நுழைய முடியா இருட்டறையில் இருண்ட நெஞ்சமொன்றும் இருப்பதன் அறிகுறியாய் ஓர் அழுகைக்குரல். மூடிய கதவும், இருள் சூழும் இருளும், முட்டித்தெறித்த கதறலும் அப்பாவையின் வலி உயிர் வரை ஆழ்ந்திருப்பதை உணர்த்தின. முப்பது வயது தாண்டியும், முடிகளில் சில வெள்ளிகள் முளைத்தும் மனைவியாகி முழுமை பெறாத முதிர்கன்னியின் மனச்சுமையை சமுதாயம் ஏனோ புறக்கணித்தே விடுகிறது. காதலித்தவனை காரணங்கண்டு பிரிய வைத்து, அக்காரணத்தின் காரணமாகி, நம்பிக்கையை இழக்க வைத்து, ஆயிரம் பேர் சுற்றத்திலும் தனிமைச்சிறையில் அடைய வைத்து கை கொட்டிச்சிரிப்பதும் ஏனோ அதன் பண்பாடும் ஆகிப்போனது. ஆண் போல் இருப்பதாய், அழகிற்குறைவதாய் ஆயிரமாயிரம் காரணம் கேட்டு தன்னையே வெறுத்தவளின், வெறுப்பவளின் வேதனை பொங்கும் வாழ்கையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

இருளும் இன்னலும் மட்டுமே நிறைந்த அத்தருணத்தை இரவிற்பூத்த மின்னல் கொடியாய்க்கலைத்தது சிணுங்கிய அவள் கைத்தொலைபேசி. கண்ணீர்த்துளி வழியே அழைப்பவன் பெயர் மங்கித்தெரிய மனதை இறுக்கி மூடி வாய் திறந்தாள். இதயத்தரையில் இருந்து அவன் மேல் ஈர்ப்பிருந்தும் இன்முகம் காட்ட ஏனோ இயலவில்லை அவளுக்கு. பயம் - தன்னையே நம்ப மறுக்கும், வாழ்க்கையில் தடுமாறித்தோற்ற, தனிமைப்பட்ட, தனித்து விடப்பட்ட ஒரு தாரகைக்கே உண்டான பயம். பல முறை உடைக்கப்பட்டு ஒட்டப்பெற்ற நெஞ்சம், மற்றுமோர் விரிசல் தாங்காதெனும் கலவரம். தனித்தும் தோற்க்கக்கூடாதெனும் அவள் வைராக்கியம் ஏனோ சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. அன்பை வார்த்தைகளாக்கி, அரவணைப்பை வாக்கியங்களாக்கி, தாய்ப்பாலின் நேர்மையுடன் "எனை மணந்து கொள்வாயா?" என ஏக்கமாய்க்கேட்ட அவன் குரல் திறந்தது மூடிய அவள் அறைக்கதவை மட்டுமல்ல, மூடப்பட்ட அவள் மனக்கதவையும் தான்.

புதன், 18 பிப்ரவரி, 2009

தமிழ் தந்தருள்வாய்...

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா


இறை வாழ்த்துடன் படைப்புகளை தொடங்குவது நமது பண்பாட்டில் ஊறிய ஒரு விஷயம். இதோ... எனது பிரார்த்தனைகளை வினை தீர்க்கும் விநாயகனிடம் சமர்பித்து விட்டேன்... தடைகள் நீங்கட்டும்... தமிழ் வெல்லட்டும்...