வெள்ளி, 9 செப்டம்பர், 2016

நீதி

எனக்கு இருட்டுன்னா பயம்... ஆனா... இப்போ நான் இருக்கிற ரூம்ல... கடுகளவு வெளிச்சம் கூட இல்லை... இப்போ என் கவலை... இருட்டை பத்தினதில்லை… சொல்ல போனா... இன்னைக்கு... இந்த நிமிஷம்... இருட்டு தான் என் நண்பன்... காரணம்... உயிர் பயம்... என்னை... சில பேர் கொல்ல தேடிட்டு இருக்காங்க… ஒரு நிமிஷம்… ஓடி வந்ததுல மூச்சு வாங்குது.

யாரு கொல்ல வர்றாங்கன்னு கேக்குறீங்களா? பரம்பரை பரம்பரையா எங்க கூட்டத்தை அடக்கி ஒடுக்கி சித்திரவதை செஞ்சு கொன்னுட்டு வர்ற அதே கும்பல் தான். காரணம் நாங்க அநாதைங்க. அதுலையும் அநாதை பெண்கள். கேக்கணுமா? நாங்க அனுபவிச்சதெல்லாம் நெனச்சு பாத்தா உடம்பே நடுங்குது. எப்பிடியும் நான் சாகுறது உறுதி.  அதுக்கு முன்னாடி நடந்த கொடுமைகளை சொல்லிட்டு போறேன். நீங்க எதாவது பண்ணுவீங்கங்குற நம்பிக்கையில்…

நாங்க வளர்ந்த ஊர் நாமக்கல். அநாதைங்களுக்கு வளந்த ஊர் தானே சொந்த ஊர் மாதிரி… இப்பிடி வாழ்றதுக்கு செத்துறலாம்ன்னு தினமும் தோண்ற வாழ்க்கை. ரொம்ப சின்ன வயசுலயே கொத்தடிமை ஆயிட்டோம். எங்களை பெத்தவங்க யாரு, ஏன் இப்பிடி எங்களை துச்சமா தூர போட்டாங்க… எதுவுமே தெரியாது. என்னை மாதிரி ஐநூறு அறுநூறு பேர். பச்சை குழந்தைங்கன்னு கூட பாக்காம கூட்டமா உள்ள தள்ளி விடுவாங்க. நெரிசல்ல ரெண்டு மூணு குழந்தைங்க செத்து கூட போயிட்டாங்க. அப்போ கூட நாங்க செத்ததை விட போட்ட காசு போச்சேன்னு தான் வருத்தப்பட்டாங்க எங்க “முதலாளி"கள். இது இப்பிடி இருக்க, நாங்க சாப்பிட்டது எப்படி தெரியுமா? ஒரு பெரிய கூண்டுக்குள்ள ஜெயில் மாதிரி அடச்சு தான் வச்சுருப்பாங்க எப்பவும். சாப்பாடு எங்க ஜெயில ஒட்டி வீசிட்டு போவாங்க. நாங்க கூண்டு வழியா எட்டினதை சாப்பிடணும். முரட்டுத் தனமா இருக்கற ஆளுங்க திடீர்ன்னு வந்து தூக்கி முடியெல்லாம் தடவிட்டு, எங்க உதட்டை வெட்டி காயப்படுத்திட்டு போவாங்க. அதிகமா சாப்பிட்டுற போறோம்னு. சத்தம் போட்டா கூட கேக்க நாதி இருக்கணுமே. அழுது அழுது ஒரு கட்டத்துல மரத்தே போச்சு.

இதெல்லாம் கூட பரவாயில்லை. வயசுக்கு வந்ததும் எங்களுக்கு கண்ட ஊசியை போட்டு உணர்ச்சியைத் தூண்டி எங்களை ஆண்களோட சேரவும் விடாம, கரு தரிக்கவும் விடாம கரு முட்டைகளை மட்டும் திருடி வித்துறுவாங்க. செயற்கை கருத்தரிப்பு, ஆராய்ச்சி ஒரு பக்கம்ன்னா,அதை சாப்பிட்டா வியாதியே வராது, ஆயுசு கூடும், உடம்பு நல்லா இருக்கும்ன்னு என்னென்னமோ காரணம் சொல்லி இரக்கமே இல்லாம வாங்கி சாப்பிடுற கும்பல் வேற இருக்குன்னு தெரிய வந்தப்போ நடுங்கிட்டோம். எங்க உடம்பு சளைக்கிற  வரைக்கும் இது தான் எங்க விதி. ஒரு கட்டத்துல இப்பிடி எடுத்து எடுத்து உடம்புல அப்பிடி ஒரு வலியும் களைப்பும் வந்துரும். சீக்கிரமே தளர்ந்து போய் கரு முட்டை வர்றது கூட நின்னப்பறம் எங்களை மறுபடியும் கும்பலா லாரிக்குள்ள ஏத்தி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இல்லை நம்ம மாநிலத்துலையே ஏதாவது ஊருக்கு அனுப்பி விட்டுருவாங்க. பசியே எடுக்காம இருக்க ஏதோ குடுத்து குடிக்க வேற சொல்லுவாங்க. வர்ற வழில வெயில் மழைன்னு எது வந்தாலும் ஒரு தார்ப்பாய் கூட கிடையாது. நாங்க உயிர் இல்லையே… பொருள் தானே! இதெல்லாம் போதாதுன்னு இப்போ ஒரு கொலைகார கும்பல் கிட்ட வந்து மாட்டிகிட்டோம். என் கண்ணு முன்னாடியே வெள்ளையம்மா அக்காவை கழுத்தை பிடிச்சு தூக்கி... கத்தியால ஒரே வெட்டு... துடி துடிச்சு முண்டமா கீழ விழுந்தாங்க. வெலவெலத்துப் போயிட்டோம். இத்தனைக்கும் எங்க கூட்டத்துலையே எப்பவும் சிரிச்சுட்டு, நல்ல வார்த்தை சொல்லிட்டு குண்டா அழகா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனசு விடாம இருக்கும் அந்த அக்கா. இப்போ பொணமா கெடக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எளவெடுத்த உசிரு மேல அப்பிடி ஒரு ஆசை, அது போயிடும்ன்னு பயம். எல்லாம் தலைக்கு ஏற ஒரே ஓட்டமா ஓடி இங்க வந்து… ஐயையோ அவங்க வந்துட்டாங்க… காப்பாத்துங்க… நான் வாழணும்… ப்ளீஸ்… காப்பாத்துங்… விடுடா… விடுடா என்னை… விட்.
(மடக் என ஓர் சத்தம், அதன் பின்னே ஒரே ஒரு விநாடி மயான அமைதி… திடீரென “மனிதன் மனிதன்” பாடல் பாடி கைபேசி அழைத்தது)

“ஆங். சொல்லுண்ணா”
“...”
“லோடு காலேலயே வந்திச்சுண்ணா. ஒரு கோயி ஓடி வந்து ஸ்டோர் ரூமாண்ட ஒய்ஜினிர்ந்தது. இப்போ தான் கய்த்த திருவுனேன். நான் பாத்துக்குரேண்ணா…”
“...”
“கொய்ந்தைக்கு இப்போ பரவால்லண்ணா… ஆட்டுக் கால் சூப்பு வச்சு குத்தா சம்சாரம்…”

(பேசியபடி அவன் கதவை மூடி நகர்ந்து செல்ல, அந்த கிடங்கில் அமைதியும் இருளும் மறுபடியும் சூழ்ந்தது)

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

யார் தமிழர்?

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு வாக்குறுதிப் பட்டியலை தயார் செய்து கொண்டு தங்களுக்கு சாதகமான சில உண்மைகளையும், பல பொய்களையும், எதிர்க் கட்சியினர் மேல் திகட்டத் திகட்ட புகார்களையும் மக்களின் முன்பு அடுக்கு மொழியிலோ, அநாகரீகமான வசைகளிலோ, வழக்குத் தமிழிலோ அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அவிழ்த்து விடும் நேரம் : தேர்தல்.

இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் பன்முனைப் போட்டியாக உருவாகி இருந்தாலும் பழம் (ஊழல்) பெருச்சாளிகள், ஜாதிக் கட்சிகள், "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க" என வீர வசனம் பேசும் கட்சிகளையெல்லாம் தாண்டி ஓரளவுக்கு அறிவுப்பூர்வமாய் யோசித்து, தெளிவான வாக்குறுதிகளுடன் களம் காணும் கட்சி இயக்குனர் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி. வேளான்மை மேம்பாடு, தன்னிறைவு, நகர் மேம்பாடு/திட்டமைப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தெளிவான சிந்தனைகளை முன்வைத்ததால் நிறையவே ஆர்வத்துடன் சீமானின் பேச்சுக்களையும், கட்சியின் பிரச்சாரங்களையும் கவனித்து வந்ததில் நான் புரிந்து கொண்ட விஷயம் - மேலோட்டமாய் நந்தவனம் போலே தோற்றமளித்தாலும் இந்தப் பாதையின் முடிவில் இருப்பது பேரழிவு மட்டும் தான். "புலி" போல் சீறிப் பாயும் முன் நான் சொல்லவிருக்கும் காரணங்களை முழுமையாகப் படித்து விடுங்கள்.

ஹிட்லர் பாதை

நாம் தமிழர் திருச்சி மாநாட்டில் 'வழிகாட்டிகள்' என்று தலைப்பிட்டு வைக்கப்பட்டிருந்த தட்டியில் முதன்மையாய் ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகக் கேள்வி. இது தெரிந்து வைக்கப் பட்டதா தெரியாமல் வைக்கப் பட்டதா தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் வாழ்வை 'வந்தேறிகள்' கெடுத்ததாய் கூறுவதில் தொடங்கி தமிழகம் நிகரற்ற, தன்னிறைவான சொர்க்கபுரி என்று பிரச்சாரம் செய்வது வரை நிஜமாகவே ஹிட்லரின் பாதையில் வெகு வேகமாய் பயணிக்கும் கட்சி இது தான். ஹிட்லரின் சுயசரிதையான 'மயின் காம்ப்' (Mein Kampf) முழுக்க வந்தேரிகளான யூதர்கள் ஜெர்மானியர்களின் வாழ்வைக் கெடுத்தது பற்றியும், ஜெர்மானியர்கள் உலகிலேயே சிறந்த இனம் என்பதற்கான 'சான்றுகளையும்' ஏராளமாகக் காணலாம். சரித்திரம் ஹிட்லரின் கோர முகத்தை மட்டுமே காட்டி நடுநிலை தவறியது உண்மையாய் இருந்தாலும் ஒற்றுமையாய் இருக்கும்/இருக்க முயற்சிக்கும் ஊரில் பிரிவினை பாராட்டத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப் போர் வரலாறே சான்று. நடக்கவிருப்பதன் முன்னோட்டமாக நாம் தமிழர் அமைப்பின் பால் தீவிர பற்று கொண்ட சிலர் தங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவ்ர்களை வந்தேறிகள் என்றும் தமிழ் தேசத் துரோகி என்றும் சமூக வலை தளங்களில் விமர்சிப்பதைக் காண முடிகிறது.

வன்முறை

பாரத பிரதமராய் இருந்தவர் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவருடன் சேர்ந்து பல அப்பாவித் தமிழர்களைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் உலகத் தமிழர்களின் தலைவராம், ஒருவரை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டாய் மாற்றி, அந்த நபர் மொழியின் பெயரால் தன்னோடு சேர்ந்து அப்பாவி உயிர்களை கோழைத் தனமாய் பலி வாங்குவது பெருமைப் பட வேண்டிய வீரச் செயலாம். தமிழனுக்கு வடிந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வடிந்தால் தக்காளிச் சட்னியா?  அட தமிழர்கள் எத்தனை பேரின் இரத்தம் விடுதலைப் புலிகலாளேயே சிந்தப் பட்டிருக்கும்? அதற்கு யார் பதில் சொல்வது? இராஜீவ் மீதோ, காங்கிரஸ் கட்சியின் மீதோ எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்தியாவைச் சுரண்டிச் சாகடித்தது காங்கிரஸ் தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் வெளிநாட்டு தீவிரவாத இயக்கம் இந்தியர் மீது நடத்திய தாக்குதலை இந்தியாவின் மீது நடந்த தாக்குதலாய் தான் பார்க்க வேண்டும்.

அதே போல் ஈழத் தமிழர்களை சகோதரர்களாக நினைப்பதில் தவறில்லை. அங்கு நடந்த கொடூரமான போர்க் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பதும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ காரணம் சொல்லி வன்முறையை நியாயப் படுத்தத் தொடங்கினால், அதை பெருமையாகக் கருதத் தொடங்கினால், பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நியாயம் கேட்கும் உரிமையை நாம் இழந்து விடுகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. மொழிக்காக உயிர் எடுப்பதும் உயிர் கொடுப்பதும் உங்களுக்கு நியாயமாகப் படுமேயானால் சாதி, மதம் என்று அவரவர்களுக்கு முக்கியமான விஷயங்களுக்காக வன்முறையில் இறங்குவது அவர்களுக்கும் நியாயமாகத் தானே படும்? 

தனித் தமிழகம்

தமிழகம் சட்ட ரீதியாய் தனி நாடாகிறதோ இல்லையோ கொள்கை ரீதியாய் முற்றிலும் தனித்து நிற்கும். நாம் தமிழரின் செயல்பாட்டு வரைவு தமிழகத்தை ஒரு தனி நாடாகத் தான் பார்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியா எனும் வார்த்தை அதில் இடம் பெறுகிறதா என்று கூடத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் அதிகாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியில் அந்த மாநிலத்தின் பங்கும் முக்கியம். வேற்றுமையால் ஒன்று பட்ட நம் நாட்டை வேற்றுமையாலேயே வேரறுக்கும் போக்கு ஒவ்வொரு மாநிலமும் தன்னை தனி தேசமாகக் கருதுவது. இலங்கையில் நடந்தது உரிமைப் போராய், ஒரு உள்நாட்டு சுதந்திர போராகக் கூட இருந்திருக்கலாம். அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் இலங்கையில் பிறந்து வளரவில்லை. ஆனால் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத இயக்கமாய் அறிவிக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரை தமிழக மக்களின் தலைவன் எனக் குறிப்பிடுவது இந்திய இரையான்மைக்கு எதிரான ஒரு செயல் என்று மட்டும் என்னால் அடித்துக் கூற முடியும்.


சுருங்கச் சொன்னால் கம்யூனிசப் போராளி போல் சிந்திக்க தமிழகம் சீனாவோ, ஈழமோ அல்ல என்பதை நினைவில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியையும் அதில் தமிழகம் ஆற்ற வேண்டிய பெரும் பங்கையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்கும் நல்லது. வாழ்க தமிழ். வளர்க இந்தியா.