வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மழைக்காதலி...

மைநிறை பேனா காகித்தக்காதலி தேட
பைந்தமிழ் வர்ணனையின் கருவாய் கனவுக்காதலி...
எண்ணத்துளி கோர்த்து வண்ணம் வடிக்குமுன்
எங்கிருந்தோ காகிதம் வந்ததோர் ஈரத்துளி...
ஒரு துளி பல துளிகளாய் மாறி
ஒரு கோடித்துளிகளென வந்தாள் மாரி...
விழி உயர்த்திப்பார்த்ததில் கண்களில் நீர்
கண்ணீரல்ல கண்களை வருடிய நீர்!
எண்ணங்களின் ஆழங்களில் ஓர் தேடல்
கண்களை மூடிக்கண்மணி குணம் நாடல்...
பார் பரவும் மழை போலே
உலகை அறிய வேண்டும் அவள்...
வடிவங்கடந்த வடிவான நீர் போலே
வடிவழகின் இலக்கணமாக வேண்டும் அவள்...
கதிர் பிரித்த கடைக்கோடி சிகப்பாய்
வெட்கம் கொள்ள வேண்டும் அவள்...
புல்வெளி மேல் தூவும் சாரலாய்
மென்மை கொள்ள வேண்டும் அவள்...
அடர் மழை ரீங்காரம் போலே
மனம் வருட வேண்டும் அவள்...
உயிரூட்டும் வான் நீர் போலே
தாய்மை கொள்ள வேண்டும் அவள்...
உன் நகலாய் ஒருவள் எதற்கு
உடல் தீண்டி உயிர் தொடுபவளே... மழையழகே...
நீயே வா என் காதலியாய்
என்னில் நீ என்றும் இருக்க!