சனி, 24 ஏப்ரல், 2010

பொய்க் கால் குதிரை - சிறுகதை

வாகனப்புகையும், ஒலிப்பான்களின் அலறலும், பரபரப்பு நோய் தொற்றிய மனிதர்களும் தென்படும் ஒரு நகரத்துக் காலைப் பொழுது. சர்தார் படேல் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டு நிற்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஒன்று ராகவனுடையது. அநேகமாக அந்த நெரிசலில் சிக்கி நிற்கும் ஒரே வெஸ்பா ஸ்கூட்டர் இவனுடயதாகத் தான் இருக்கும். இன்னும் சற்று உயரமாக இருந்திருக்கலாம், இன்னும் சற்று வசதியுடன் பிறந்திருக்கலாம், இன்னும் சிறப்பாகப் படித்திருக்கலாம், இன்னும் பெரிய வேலையில் இருந்திருக்கலாம்... இப்படிப் பல "இருக்கலாம்"ங்களின் உறைவிடம் ராகவன். பாழாய்ப் போன பட்டணத்தில் வாழ வேண்டுமென்ற கட்டாயத்தில் வாழ்கையின் சுகங்களைத் தொலைத்து, பணத்தைத் தேடி அலையும் நடுத்தர வர்க்கத்தின் உதாரண புருஷன்.

"ஏய் கஸ்மாலம்... காலங்காத்தால ட்ராபிக் ஜாம்ல கண்ணாடிய பாத்துனு கனா கண்டுனிருக்குது பாரு. $^%$^%$ புள்ள."
கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் கோபமாய்த் திரும்பிப் பார்த்தான். TN 02 AL 4987 ஆட்டோவிலிருந்து தான் அர்ச்சனை விழுந்து கொண்டிருந்தது.
"இன்னா மொறைக்கிற? வுட்டேன்னா செவுலு அவுலாயிடும்"
இறங்கி அவனை அடிக்க வேண்டுமென்று தோன்றினாலும் அவசரத்தில் இருப்பதன் காரணமாக அமைதியாய் வெஸ்பாவை நகற்றினான். "TN 02 AL 4987..." மனதிற்குள் முணுமுணுத்தான்.

துரைப்பாக்கம் தாண்டியதும் வெஸ்பா வெலவெலக்கத் தொடங்கியது. பின் சக்கரம் மூச்சைப் பறிகொடுத்து மடிந்திருந்தது.
"ஆண்டவா... என்ன ஏன் இப்பிடி சோதிக்கிற?" விரக்தியாய் ஸ்கூட்டருக்கு ஒரு உதை கொடுத்து விட்டு, உதைத்த வேகத்தில் அதை துடைத்தும் விட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டமாய் ஒரு வாகன மருத்துவமனை அருகிலிருந்தது. "முருகன் ஆட்டோ ஒர்க்ஸ்" என்ற பெயர்ப் பலகையின் கீழ் அழுக்கேறிய உடையும், முறுக்கேறிய உடலுமாய் ஒரு நடுத்தர வயதுக்காரன் ஸ்பார்க் ப்ளக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

"Back Tyre பஞ்சர்..."
"அப்பிடி வை சார். டேய் ராஜா... ஸ்கூட்டர் பஞ்சர்... இன்னான்னு பாரு"
ஸ்கூட்டரை விட சற்றே உயரமாயிருந்த சிறுவன் பின் சக்கரத்தை கழற்றி சிகிச்சைக்குக் கொண்டு சென்றான்.
"கௌசல்யா சுப்ரஜாராம பூர்வா சந்த்யா..."
ஊனமாகி விட்டிருந்த தன் கிழட்டுக் குதிரையை வெறித்தபடி கூரை அடியில் நின்று கொண்டிருந்த ராகவனின் கைபேசி அவனை சுப்ரபாதம் பாடி அழைத்தது.
"ஹலோ"
"சார். சொல்லுங்க சார்"
"வண்டி பஞ்சரா போச்சு சார். மெக்கானிக் கடைல இருக்கேன்... இன்னும் ஒரு 15 minutes ல அங்க இருப்பேன் சார்"
"..."
"சாரி சார்..."
"..."
"சார். ஆமாம் சார். 9 மணிக்கு அங்க இருக்கணும்னு சொன்னீக. ஆனா வர்ற வழில traffic jam... இப்போ வண்டி பஞ்சர்... அதான்..."
"..."
"கண்டிப்பா சார்... 9:30 கெல்லாம் நிச்சயமா அங்க இருப்பேன் சார்"
"..."
"அப்பிடி எதுவும் பண்ணிராதீக சார்.. சம்பளத்துல 500 ரூவா பிடிச்சீகன்னா இந்த மாசம் ரொம்ப சிக்கலாகிப் போகும் சார். புள்ளகுட்டிக் காரன்..."
"..."
"Thank You சார். ஓகே சார். ஓகே..."

இணைப்பைத் துண்டித்து நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டான். "வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல..." மனதிற்குள் புலம்பினான்.
"இந்தாய்யா மெக்கானிக். இன்னும் எம்புட்டு நேரம் ஆகும்?"
"தோ முஞ்சிச்சி சார். 2 நிமிட்ஸ்"
ஒட்டுப்போட்ட பின்னங்காலைப் பொருத்தி விட்டு பொடியன் "அண்ணாத்த... முஞ்சிச்சு..." என்றான்.
"150 குடு சார்"
"எதுக்குய்யா 150?"
"ஆங்... சிலுக்கு ஸ்மிதா டான்ஸ் ஆட்னுதுக்கு. இன்னா சார் நீ... பஞ்சர்க்கு தான் சார்"
"150 ரொம்ப அதிகம்யா..."
"சார். காலங்காத்தால சொம்மா தொனதொனனு பேசிநிருக்காத சார். 150 குட்த்து எடத்த காலி பண்ணு சார்"
வேறு வழி இன்றி பாக்கெட்டினுள் பார்த்தான்... ஒரு நூறு ரூபாய்த் தாள், இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள், ஒரு ஐந்து ரூபாய் நாணயம், இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு ஒரு ரூபாய் நாணயம்...
"என்கிட்டே 130 தான்யா இருக்கு..."
"இன்னாது 130 தான் இருக்கா? காசில்லன்னா நீயெல்லாம் எதுக்குய்யா ஸ்கூட்டர்ல வர்ற? தோ போவுது பாரு PTC... அதுல புட்போர்டுல போவேண்டித்தான... காயிலான் கட ஸ்கூட்டர்ல வர்சொல்லோவே நெனச்சேன்... பார்டி வண்டி மட்டும் தான் பஞ்சரா பர்சும் சேத்து பஞ்சரானு... இனி இந்த ஏரியா பக்கமே வந்துறாத சாவுக்ராக்கி..." ராகவன் கையிலிருந்த காசைப் பிடுங்கியபடி வசை பாடினான்.

கோபமும், இயலாமையும் வேகமாய் மாற, வெஸ்பா அனுமதித்த உச்சக் கட்ட வேகத்தில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்தான். மணி 9:35.
"கௌசல்யா சுப்ரஜாராம பூர்வா சந்த்யா..."
மறுபடியும் முதலாளியிடம் இருந்து அழைப்பு... ராகவன் அவரது கணக்காளன் மற்றும் நிர்வாக மேற்பார்வையாளன். இந்தப் பணிக்கு ஏன் இவ்வளவு நேரக் கெடுபிடிகள் என்று ராகவனுக்கு இன்றளவிலும் விளங்கியதில்லை.

"சார்... நான் வந்துட்டேன் சார். இப்போ chennai infotech ஆபீஸ்ல தான் சார் இருக்கேன்."
"..."
"சார்... 9:35 சார்"
"..."
"சார்... அது... 9:30 சார்"
"..."
"சார் சார்... கொஞ்சம் அனுசரிச்சுக்குங்க சார்... வழில மாட்டிக்கவும் late ஆகி போச்சு. இல்லைன்னா..."
"...."
"சார்... சார்..." இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எழுந்து மூன்றரை மணி நேரத்திற்குள் மூன்று நபர்களால் 630 ரூபாய்களையும், நிறைய மரியாதையையும் பறி கொடுத்திருந்தவன், முட்டிக் கொண்டு வந்த கோபத்தை பெருமூச்சாய் மாற்றி அலுவலகத்தினுள் நுழைந்தான்.

இரவு 8:30... ராகவனின் கான்க்ரீட் குடிசை.

"அப்பா... இன்னைக்கி நான் singing competition ல first prize வாங்கினேன் பா" ராகவனின் ஏழு வயது மகள் ரமா பூரிப்புடன் தன் கையிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவைக் காட்டிக் கொண்டிருந்தாள்.
"வெரி குட்" என்று செயற்கையாய் பாராட்டினாலும், ராகவனுக்கு மனது இன்னும் அமைதி ஆனபாடில்லை.
"சாப்பிட வர்றீகளா..." சுமதியின் குரல் சமையலறையில் இருந்து கேட்டது.
ரமாவைத் தூக்கியபடி உணவருந்தச் சென்றான். உண்ணும் பொழுது மனைவியும் மகளும் பேசிய எதுவும் இவன் மனதில் ஒட்டவில்லை. அவமானமும், கோபமும் மட்டுமே அவன் மனதில் மேலோங்கி இருந்தது.

இரவு 10:30...

"இன்னும் தூங்காம என்ன செஞ்சுடிருக்கீக?"
"நீ படுத்துக்க சுமதி... நான் வர்றேன்"
"மேலுக்கு முடியலையா? ஏன் என்னமோ மாதிரி இருக்கீக?"
"தொந்தரவு பண்ணாம போறயா? நான் கொஞ்சம் தனியா இருக்கணும்"
"வெளில இருக்குற கோவத்த எல்லாம் வீட்ல காட்றதே வேலையா போச்சு" சுமதி சலித்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

இரவு 11:30...

"டானி... நான் ராகவன். வேட்டைக்கு நேரம் வந்தாச்சு" ராகவன் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் குரலில் அசாதாரணமான கம்பீரம். நிற்கும் பொழுது லேசாக கூனி நிற்கும் அவன் இப்பொழுது நெஞ்சை நிமிர்த்தி ஜல்லிக்கட்டு வீரனைப் போல் நின்று கொண்டிருந்தான். ஒரு 0.45 ரக துப்பாக்கி முதுகுத்தண்டின் அடியில் முளைத்திருந்தது.
"மூணு பேர்... எல்லாமே South Chennai தான். துரைப்பாக்கம், அடையார், தாம்பரம்... இந்த மூணு ஏரியா லீடர்சையும் வர சொல்லு. ஆளுக்கு ஒரு gun போதும். சப்ப பசங்க தான். Details நோட் பண்ணிக்க... ஒருத்தன் TN 02 AL 4987 ஆட்டோ டிரைவர். கடேசியா அவன பாத்தது அடையார்ல. ரெண்டாவது துரைப்பாக்கத்துல மெக்கானிக் கட வச்சுருக்குற முருகன்... மூணாவது பிளாட்டினம் லைன் காடெரிங் வச்சு நடத்துற ராமசந்திரன்... இவன் வீடு தாம்பரத்துல இருக்கு. மூணு பேரையும் கட்டி தூக்கிட்டு வந்தப்பறம் எனக்கு போன் பண்ணு"

நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...

சரியாக பதினைந்து நிமிடத்தில் அவனது Nokia 9500 Communicator அறைகூவலிட்டது.

ராகவன் ஒரு கறுப்பு அரியாசனத்தில் வீற்றிருக்க, அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலிகளில் அவமதித்த ஆட்டோக்காரன், அநியாய விலை கேட்ட மெக்கானிக், இரக்கமில்லாமல் நடந்து கொண்ட முதலாளி மூவரும் கட்டப்பட்டிருந்தனர்.
"என்ன பாக்குறீங்க? அதிர்ச்சியா இருக்கா? நான் யாரு தெரியுமாடா? எனக்கு கீழ எத்தன அடியாளுங்க இருக்காங்கனு தெரியுமா உங்களுக்கு? அஞ்சு லட்சம் பேர்... ஒரு தனி army மாதிரிடா என் படை. இப்போ காட்றேன்டா உங்களுக்கு நான் யாருன்னு". டானியை ஓரக்கண்ணால் ராகவன் பார்க்க, மூவருக்கும் தீபாவளி தொடங்கியது.

"ரோட்ல எறங்கி சண்ட போட மாட்டாங்கனு நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவியாடா? பாய்ஸ்... அவன் வாய்லயே அடிங்க..."
ஆட்டோக்காரனின் வாய் வீங்கியதும் ராகவனின் பார்வை முதலாளியின் மேல் விழுந்தது.
"ஏன்டா... சேத்த காசெல்லாம் போதாதா உனக்கு? அடுத்தவன் காசுக்கு ஏன்டா ஆசைப்படற ஈனப்பயலே... ஒவ்வொருத்தன் எவ்ளோ கஷ்டப்பட்டு வாழ்க்கைய ஒட்டிட்டிருக்கான்னு தெரியுமாடா உனக்கு? பணக்காரப் _______. இவன நிர்வாணமாக்கி ஒரு எடம் விடாம அடிச்சு நொறுக்குங்கடா"
முதலாளி அலறிக் கொண்டிருக்க, ராகவனின் கவனம் இப்பொழுது மெக்கானிக்கின் மேல்...
"கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவன் எல்லாம் உனக்கு இளக்காரமா போய்ட்டான்ல... ஒரு பஞ்சர் ஒட்றதுக்கு 150 ரூவாயாடா? அது அதிகம்னு சொன்னா சாவுக்ராக்கி, காயிலான் கட வண்டினு சொல்லுவியா? அந்த வெஸ்பா அந்தக் காலத்துலயே 5000 க்கு வாங்கினது தெரியுமா உனக்கு? இப்பிடி பல பேர் கிட்ட திருடின காசுல தான ஒடம்ப வளத்துருக்க? இவன பட்டினி போட்டு வேளா வேளைக்கு அடி தாராளமா குடுங்கடா. இனிமே இவனுக்கு பணத்து மேல ஆசையே இருக்கக் கூடாது. ஏதாவது பேசினா ரெண்டு அடி bonus குடுங்க."
"அய்யா... எங்கள தயவு செஞ்சு மன்னிச்சுருங்க... நாங்க ரொம்ப தப்பா நடந்துகிட்டோம். நீங்க யாருன்னு தெரியாம போச்சு... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கய்யா." மூவரும் ராகவன் கால்களில் விழுந்து கதறினர்.
"மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த" என்றவன் டானியின் பக்கம் திரும்பி
"டானி... ஒரு வாரம் இவங்கள ட்ரீட் பண்ணிட்டு விட்டுடு.... எவனாவது ரொம்ப பேசினா போட்டு தள்ளிடு."
"ஓகே பாஸ்"
"என்னங்க..." சுமதி அழைக்க, ராகவன் திரும்பிப் பார்த்து "நீ இதெல்லாம் பாக்க கூடாது சுமதி. உள்ள போ..." என்றான்.
"என்ன பண்ணறது... இதெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து... என்னங்க... எந்திரிங்க. chair லயே தூங்கிட்டீங்களா?"
"ஆங்... ஓ... ஆமா... குட் மார்னிங்" கண்விழித்த ராகவனின் முகத்தில் பிரகாசமான புன்னகை...
"குட் மார்னிங் எல்லாம் அப்பறம் இருக்கட்டும். இந்தாங்க உங்க cell phone. ராமசந்திரன் சார் பேசணுமாம்..."
"குட் மார்னிங் சார். 8:30 க்கா சார்? சரி சார். நான் போய் பாக்கறேன் சார். Thank You சார். சார் அந்த 500 ரூவா... கொஞ்சம் பாத்து செய்ங்க சார்"
"ஓகே சார். ஓகே சார்."
"சுமதி அவசரமா கெளம்பணும். என் வெள்ளச் சட்டைய iron பண்ணிறியா? நான் மேலுக்கு குளிச்சுட்டு வந்துர்றேன்"
ராகவன் பரபரக்கத் தொடங்க ஜன்னலுக்கு வெளியே சூரியன் வானுக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தான்.

-- கற்பனைகளால் கவலைகளைக் கொன்று வாழும் கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு என் சமர்ப்பணம்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

எண்(ணங்)கள் - சிறுகதை

நாற்பது, நூறு, நூற்று இருபத்தி மூன்று, இருநூற்றிப் பதினேழு, இருநூற்றித் தொண்ணூறு. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுத்திருந்தது என்று காட்டும் அட்டவணையைப் போல் இருந்தாலும் இந்த எண்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது என் தட்டிலுள்ள உணவின் (இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் உணவில் அடங்கியிருக்கும் சக்தியின்) கூட்டுத்தொகை. அநேகமானோருக்குப் புரிந்திருக்கும். புரியாதவர்கள் கூகிளைக் கேட்கவும். கூகிள் என்னவென்று கேட்டால் இத்துடன் நீங்கள் இந்தக் கதையைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

"இந்த மீட்டர் பயபுள்ள அடங்கமாட்டான்லே..." கட்டாரியின் குரல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறை சேர்ந்து உணவருந்தும் போதும் அவன் தவறாமல் கூறும் வசனம். கட்டாரி என்கிற கார்த்திக் நெல்லையில் இருந்து வந்தவன். மாநிறம், ஐந்தடி ஐந்தரை அங்குல உயரம், எழுபதுக்கும் எழுபத்தி ஒன்றுக்கும் இடைப்பட்ட கனம் (கடைசியாய்ப் பார்க்கையில் எழுபது புள்ளி ஏழு). தன் விருப்பு வெறுப்பகளைக் கூறத் தயங்காத ஒருவன் - அது கேட்பவர் மனத்தைக் கொடுவாள் கொண்டு கீறினாலும். நல்ல ஞானஸ்தன். ஆப்ரிக்காவில் ஒரு ஒரே தவணையில் அறுநூற்றுப் பத்து முட்டைகள் இட்ட கதையைக் கூடத் தெரிந்து வைத்திருப்பான். தான் ஒரு கதாநாயகன் என்கிற ஆணித்தனமான மூடநம்பிக்கை இவனிடம் உண்டு. நாத்திகவாதி. சீர்திருத்தவாதி என்று தான் அதைக் குறிப்பிட வேண்டும் என்று பல நாட்கள் எங்களுடன் வாதிட்டிருக்கிறான்.

"இன்னும் நீங்க சாப்பிடலையா?"
"இதோ... சாப்பிடறேன்... ஒரு அஞ்சு நிமிஷம்!"
"ஒண்ணும் அவசரம் இல்ல. ஆனா ரொம்ப லேட் பண்ணிறாதீங்க. அப்பறம் இலஞ்சோட சேத்து சாப்பிடறா மாதிரி ஆயிட போகுது!" என்றபடி சிரித்துக் கொண்டே சென்றாள். சில நாட்களுக்கு முன் இந்தச் சிரிப்பைக் கேட்டிருந்தால் சிரிப்பால் சிலிர்ப்பைத் தருபவளே என்று அவளை வர்ணித்திருப்பேன். இப்பொழுது ஒரு வெறுமையான சிரிப்பு மட்டுமே என் உதட்டோரத்தில் வெளிப்படுகிறது. கடமையாய்ச் சாப்பிடத் தொடங்குகிறேன்.

உப்பு, உவர்ப்பு, காரம் இல்லாத பச்சைக் காய்கறிக் கலவை. பல முறை இதை உண்ணச் சொல்லி புல்லட்டை கட்டாயப்படுத்தி இருக்கிறேன். அதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவன் முகம் அஷ்டகோணலாய் மாறுவதைப் பார்த்தால் மெகா சீரியல் நாயகி கூட விழுந்து விழுந்து சிரிப்பாள். புல்லட் என்கிற கோபிநாத்தின் சொந்த ஊர் ஏலகிரி. குணத்தில் இவன் கட்டாரிக்கு நேர் எதிர் என்றே கூட சொல்லலாம். இவனுக்குத் தன் காலடியில் சுற்றி வரும் கூடக் கண்ணுக்குத் தெரியாது. அதிர்ந்து பேசாத அமுக்குளி. எதிலுமே தீவிரமான ஈடுபாடோ வெறுப்போ கிடையாது. சற்றே இடுங்கிய இடி அமீன் போல் காட்சி தந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இவன் ஒரு மிகச் சராசரி இந்தியக் குடி மகன். நல்ல "குடி மகனும்" கூட. இந்த உணவுப்பிரியனுக்கு மிகவும் பிடித்தது உருளைக் கிழங்கு. புல்லட் என்கிற பெயர் வரக் காரணமும் அது தான்.

நான், கட்டாரி, புல்லட். திருவான்மியூரில் புறாக்கூடு போன்ற பழைய கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் நான்காம் வீட்டில் குடியிருக்கும் (குடியிருந்த?) மூவர். முதலாம் கடற்கரைச் சாலை கடலில் முட்டுவதற்கு சற்று முன் சரேலென இடது பக்கம் திரும்பினால் எங்கள் மாளிகையைக் காணலாம்.

"ஒரு வழியா சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா" புன்சிரிப்புடன் கேட்டவள், "வேற எதுவும் வேணும்னா கேளுங்க. நான் அடுத்த ரூம் தான் இருக்கேன்" என்றபடி விலகிச் சென்றாள். டக்... டக்... டக்... கிராபிக்ஸில் ஒலி மாற்றம் செய்தது போல் பல காலடிச் சத்தங்களும், இயந்திரங்களின் உறுமலும், இரும்புத்தட்டுகள் ஒன்றோடொன்று இடிக்கும் சத்தமும் எனை சூழ்ந்தன.

"நாப்பத்தி எட்டு... நாப்பத்தொம்போது... அம்பது" ஒரு வித பெருமையுடன் எழுந்து என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். "இன்னும் ஒரு வாரத்துல eight packs வந்துரும்..." என் மனது ஆர்ப்பரித்தது. கட்டாரி நின்ற இடத்திலேயே பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து விட்டு வந்தான்.

"ஏலே. போலாமாடே?"
"போகலாம் டா"
"இந்த புல்லட்டுப் பய ஏன்லே இப்பிடி குத்த வச்ச புள்ளயாட்டம் வூட்ட விட்டு வெளிய வர மாட்டேங்கான்" நக்கலாய்ச் சிரித்தான்.
"வெளில வர்றதெல்லாம் அப்பறம் இருக்கட்டும். அவன் நெய் ஊத்தாம சாப்பிட்டு பாத்துருக்கியா நீ?"
"நீ வேணாப் பாருடே. வெடிச்சு சாகப்போறான் குந்தாணிப் பயபுள்ள"
சிரித்தபடி இருவரும் வாகன நிறுத்தத்திற்கு வந்தோம். நான் எங்கள் நீல யுனிகார்னின் உயிர் நாடியை அழுத்த, அது சோம்பல் முறித்துச் சீறிப் பாய்ந்தது.
"போற வழில டாஸ்மாக் மறந்துறாத மச்சான்..."
சரி என்று நான் சொன்னது கூட நீலக் குதிரையின் கண்மூடித் தனமான வேகத்தில் கட்டாரிக்குக் கேட்டிருக்காது.

"கண்மூடித்தனம் என்று பரவலாக அழைக்கப் படுவது உள்ளுணர்வின் வெளிப்பாடு. கண்களை மூடி நாம் காணும் காட்சிகள் நமக்குள் இருக்கும் ஆழ்ந்த எண்ணங்களின் பிரதிபிம்பங்கள். கண்களைத் திறந்ததும் உண்மையென நாம் நம்பும் உலகத்தின் தாக்கம் நமக்குள் இருக்கும் உண்மையைத் தாக்கி விடுகிறது." புரியவில்லையா? புரியாமல் பேசுவது தானே மனோதத்துவப் பேராசிரியர்களின் தொழில். கல்லூரி இறுதியாண்டில் என் பேராசிரியர் கூறிய வரிகள் இவை. இவை உண்மையாக இருந்தால், உடல் நலக் குறைவு உள்ளுணர்வையும் சேர்த்துத் தாக்கும் என்று தான் கூற வேண்டும். நான் கண்களை மூடினாலும் எனக்குத் தெரிபவை என்னவோ வெளிர் நீலச் சுவர்கள், அடர்ப் பச்சைத் திரைகள், கருஞ்சிவப்புக் கதவுகள், வெள்ளையுடை அணிந்த தாதிப் பெண்கள். மருத்துவமனையில் நான் மட்டுமல்ல... என் உள்ளுணர்வும் சேர்ந்து சிறைபட்டு விட்டது போலும். தலையணைக்கு மறுபடியும் கண்ணீர் அபிஷேகம். இருண்ட வானைப் போலச் சோகம் சூழ்ந்திருப்பதாலோ என்னவோ கண்ணீருக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

இருண்ட வான்... அதை சோகத்திற்கு ஒப்பாக நானா பிரயோகித்தேன்? கருநீல வானின் கீழ் தான் எத்தனை பிரகாசமான நினைவுகள்... எத்தனை விவாதங்கள்... எத்தனை விமர்சனங்கள்... எத்தனை சிரிப்புகள்... எத்தனை சிந்தனைகள்... மொட்டை மாடியில் கடற்கரைக் காற்றில் கரைந்த நொடிகள் தான் எத்தனை சுகமானவை!

"______ இந்த மனிசப்பயளுவோ இருக்கானுவோ பாரு... ஏ செய்யிறதெல்லாம் செஞ்சுபுட்டு தப்புச்சுக்கிட்றதுக்கு சாக்கு தேடுவானுவோ... அப்பறம் சாமி, விதி, பூதம்னு பழிய போட வேண்டியது..." கட்டாரியுடன் கட்டிங் கலந்தால் அவன் தத்துவச் சொற்பொழிவை யாராலும் தடுக்க முடியாது.
"அப்பிடியெல்லாம் சொல்லாத டா. வாழ்க்கைல எத்தனையோ விஷயங்கள் நம்ம கைய்ய மீறிப் போறதில்லையா?"
"கை மீறி போனா கடவுளா... இவன் யாருலே சாமியாராப் போக வேண்டியவன் சரகடிச்சுட்டு ஒக்காந்திருக்கான்... ஏலே புல்லட்டு... நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பேசிகிடுதோம்... நீ ஏன்லே ஊமைக்கொட்டானாட்டம் ஒக்காந்திருக்க? வாயத் தெறந்து எதாச்சும் சொல்லு மக்கா"
"ம்ம்... சரக்கு தீந்து போச்சு மச்சி."
கட்டாரி அவனை அடிக்க கையை ஒங்க நானோ வியப்பில் மூழ்கிக் கிடந்தேன். ஒரு வகையில் புல்லட்டைப் பார்த்து பொறாமையாகக் கூட இருந்தது. சுற்றுப்புறம் சற்றும் பாதிக்காத ஞானியைப் போல் (எருமை மாட்டைப் போல் என்று கூட கூறலாம்) கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்காமல், தன் கருத்தை விட்டு சற்றும் விலகியும் போகாமல் ஒரு அழுத்த நிலையில் எப்பொழுதும் இருப்பது எவ்வளவு கடினம்!

"பாஸ்கர்... பாஸ்கர்..."
"ஆங்..."
"உங்க BP check பண்ணனும்" மறுபடியும் அவள். தெளிந்த முகம், சற்றே ஏறிய நெற்றி, திருத்தமான புருவம், திரண்ட கன்னம், நீண்ட கருவிழிகள், நிறைந்த இதழ்கள், இதழோரப் புன்னகை... சுருக்கமாய்ச் சொன்னால் இவள் ஒரு தேவதை. செத்தால் இவள் கைகளில் சாக வேண்டுமென நான் வேண்டியதில் என்ன ஆச்சரியம்?

இரத்த அழுத்தமானி என் கைகளை இறுக்கிக் கொண்டிருந்தது.

இஸ்க்...இஸ்க்...இஸ்க்...

"ஏலே மக்கா. காத்த புள்ளைய பாத்து அடிக்காம பந்த பாத்து அடிலே..."
என்னை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்ததை அப்பொழுது தான் உணர்ந்தேன்... தர்மசங்கடத்தை சிரிப்பாய் உதிர்த்தேன். ஆயிரம் மல்லிகைகளுக்கிடையில் பூத்த சிகப்பு ரோஜாவைப் போல் சாலையில் அவள் எங்கிருந்தாலும் ஏனோ எனக்குத் தென்படத் தவறியதில்லை. அவள் நடையிலிருந்த நளினமும், நடக்கையில் சரிந்தாடிய நீள் குழலும் எனைச் சுண்டி இழுக்க என் மனம் அவள் கால்களை விடுத்து இந்தக் கால்பந்திலா நிற்கும்?
"கட்டாரி... என்ன அழகுடா அவ. செத்தா அவ கைல சாகணும் டா. இன்னைக்கி வேம்புலி அம்மன் கோவில்ல கூட இது தான் வேண்டிகிட்டேன் தெரியுமா?"
"நல்ல சாமி... நல்ல வேண்டுதல்... நீ காத்தடிச்சது போதும். வாலே வெளாடுவோம். இங்க நின்னா 120 போட்டாப்புல நின்னுட்டுக் கெடப்ப"

"...பார் 80"
"ஆங்?"
"BP சரியா 120/80 இருக்குனு சொன்னேன்" சிரித்தாள்... இல்லை... இதயச்சித்திரவதை செய்தாள்.
"அம்மா... எப்போ வர்றாங்க?"
"கொஞ்ச நேரம் முன்னாடி தான் பேசினாங்க. உங்கள விசாரிச்சாங்க. திருப்பதில ரொம்ப கூட்டமாம். கோபி ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ணறதா சொல்லிருக்காராம். எப்பிடியாவது இன்னைக்கி ராத்திரி வந்துர்றேன்னு சொன்னாங்க"
"நாளைக்கி ஆபரேஷன்..."
"ஆமா. அம்மாவும் கோபியும் கண்டிப்பா வந்துருவாங்க கவலைப்படாதீங்க" கைகளைப் பற்றிக் கூறி தன் பஞ்சுக் கைகளால் என் பதட்டத்தைத் துடைத்துச் சென்றாள்.

"ஏலே சவத்த மூதி... டாஸ்மாக்லே..." கட்டாரி கையைப் பதட்டமாய்ப் பற்ற
"ஓ. சாரி டா..." என்றபடி அவசரமாய் வண்டியைத் திருப்பினேன்.

ஷ்... டம்... அம்ம்மா... தட்... தொம்

கண்களை இருள் சூழும் முன் கடைசியாய் நான் கண்ட காட்சி கட்டாரி இரத்த வெள்ளத்தில் கிடந்தது தான். விழித்தெழுந்து பார்க்கையில் என் உடம்பில் ஆங்காங்கே ஓட்டுப் போடப் பட்டிருந்தது. கட்டாரி கடைசி நிமிடங்களில் இருப்பதை அறிந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் அவனைப் பார்க்கச் சென்றேன்.

"மீ...ட்...ட...ர்... ம...க்...கா..." வார்த்தைகளை பிரசவித்தான்.
அவன் கைகளைப் பற்றி காதருகில் சென்றேன்.
"என்...ன...என்ன... சா...மி கா...பாத்துமாடா..."
ஒரே நொடியில் அவ்வளவு சோகத்தையும், அவ்வளவு வலியையும், அவ்வளவு குற்ற உணர்ச்சியையும் தாங்கிப் பக்குவப்படாத என் இதயம் லேசாகச் சுணங்க உலகம் என் கண் முன் இருண்டது, கட்டாரியின் வாழ்க்கையைப் போல்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சுரும் மா. உங்க பையனுக்கு அதிர்ச்சில இருதயத்துக்கு போற ரத்த நாளம் சுருங்கிப் போச்சு. இத Vasospasm னு சொல்லுவாங்க. பெட் ரெஸ்ட்ல இருந்தா இப்போதைக்கி பிரச்சனை இல்ல. ட்ரிப்ஸ் கூட குடுக்கல. ஆனா... உடனே ஆபரேசன் பண்ணனும்... ஆனா இதய ஆபரேஷன்றதுனால உயிருக்கு உத்தரவாதம் குடுக்க முடியாதும்மா... நாங்க எங்களால முடிஞ்சத கண்டிப்பா செய்வோம்... ஆனா எதுவும் உறுதியா சொல்ல முடியாது!" எங்கோ ஒரு அறிமுகமில்லாத குரல் யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தது. ஆனால் ஏன் என் அம்மா அழுகிறாள்? தெரியவில்லை...

கண் விழிக்கையில் அம்மா அருகிலிருந்தாள். புல்லட் உடனிருந்தான்.

"ஒடம்பு எப்பிடிப்பா இருக்கு"
"நல்லா இருக்கேம்மா..."
"இந்தா திருப்பதிப் பிரசாதம்..." பாசத்தையும், விஞ்ஞானத்தையும் அனுசரித்து அம்மா தந்த ஒரு சிறிய துண்டு லட்டு அமிர்தமாய் இனித்தது.
"சாமி பாதத்துல வச்ச சந்தனமாம்... எழுமலயானே என் புள்ளைய காப்பாத்து" லேசான விசும்பலுடன் நெற்றிப் பொட்டைக் குளிர்வித்தாள்.

"எதுனா வேணும்னா சொல்லு மச்சி... வாங்கினு வந்துர்றேன்" வெகு நேரமாய்த் தன் சோகத்தை எப்படி விவரிப்பது என்று சிந்தித்து புல்லட் தேர்வு செய்த வார்த்தைகள். ஹ்ம்ம்...நடுநிசி நெருங்கையில் ஒருவனுக்கு என்ன தேவைப்பட முடியும்?
"ஒண்ணும் வேணாம் மச்சி... தேங்க்ஸ்"
"டாக்டர் கிட்ட பேசிட்டேம்பா. உனக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டாரு. ஒரு சின்ன ஆபரேசன் தானாம். தைரியமா இருங்கனு சொன்னாரு... நீ படுத்துக்கப்பா. தம்பி... நீ கூட போய் தூங்குய்யா. காலேல தான் ஆபரேஷன். அது வரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கப்பா. தங்கமான புள்ளடா பாஸ்கர்."
புல்லட் வெள்ளந்தியாய்ச் சிரித்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினான். அம்மா அருகிலிருந்த சோபாவில் படுத்துக் கொள்ள, தூங்கிக் களைத்து மற்றுமோர் தூக்கம்.

"Good Morning young man!"
"Good Morning doctor"
"Are you ready?"
"Yes Doctor"
"Sister... அந்த anesthetist வந்தாச்சா?"
"வந்துட்டே இருக்காரு டாக்டர். இன்னும் 5 நிமிஷத்துல இங்க இருப்பாரு"
"குட். தியேட்டர ரெடி பண்ணுங்க. இவர டிரஸ் அப் பண்ணி அங்க ஷிப்ட் பண்ணுங்க."
"சரி டாக்டர்"
உருகிக் காதலித்த... இல்லை... உருகியுருகி ரசித்த பெண் எனக்கு வாழ்வா-சாவா போராட்டத்திற்கான கவசம் அணிவித்துக் கொண்டிருக்க, அம்மா என் முன் அழக் கூடாதென்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்க, எதற்குமே கலங்காத புல்லட் கூட சோகத்திடம் சிக்குண்டு தவித்துக் கொண்டிருந்தான். எனைச் சுற்றி இருக்கும் அனைவர் மனங்களிலும் எண்ணங்களின் போர் நடந்து கொண்டிருக்க என் மனது பளிங்கு நீரோடை போல் தெளிந்திருந்தது. போதி மரத்தடியில் புத்தனுக்கு இப்படித் தான் சலனமற்ற உள்ளம் இருந்திருக்குமோ என்னவோ.

கண்ணீர் நதியைக் கடந்து சக்கர நாற்காலி எனை அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அது வரை சலனமற்றிருந்த என் மனதில் மயக்க ஊசியைக் கண்டதும் புயல் வீசத் தொடங்கியது.
"இந்தா திருப்பதிப் பிரசாதம்"
"என்...ன...என்ன... சா...மி கா...பாத்துமாடா..."
"சாமி பாதத்துல வச்ச சந்தனமாம்... எழுமலயானே என் புள்ளைய காப்பாத்து"
"செய்யிறதெல்லாம் செஞ்சுபுட்டு தப்புச்சுக்கிட்றதுக்கு சாக்கு தேடுவானுவோ... அப்பறம் சாமி, விதி, பூதம்னு பழிய போட வேண்டியது"
"வாழ்க்கைல எத்தனையோ விஷயங்கள் நம்ம கைய்ய மீறிப் போறதில்லையா?"
"கட்டாரி..." எண்ணத்திரையில் மயக்க மருந்து கறுப்பு மையாய்க் கசிய உலகத்தை விட்டு மெல்ல விலகிச் செல்கிறேன். இந்தப் பிரிவு தற்காலிகமா? நிரந்தரமா? தெரியவில்லை...

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இறைவனைத் தொழுதும் இன்னல் வந்தும்
இனிமைக்குச் சற்றே பஞ்சம் பிறந்தும்
இருபத்தி ஐந்தை கடிகாரம் மறந்தும்
மனிதத்தின் சாரம் சற்றே மறைந்தும்
புதியதோர் ஆண்டு பிறத்தல் புத்துணர்வே
உதிக்கும் நம்பிக்கைச் சூரியனின் ஒளியுமதே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.