திங்கள், 1 மார்ச், 2010

வங்கிகள் எனப்படும் வஞ்சகர்கள்!

"பாங்கு கடனை எல்லாம் நம்பாதப்பா..." - தந்தைமார்களும், பாட்டன்மார்களும் அடிக்கடி குறிப்பிடும் வாக்கியம் இது. நவீன யுகம், கடன் சார்ந்த பொருளாதாரம் என்று பல நவீன வாசகங்கள் திசையெங்கும் எதிரொலித்தாலும் மேற்கண்ட வாக்கியம் இன்றளவிலும் உண்மையாகவே விளங்குகிறது. ஏனோ நியாயமான தேவைகளுக்கு பொறுப்புணர்ச்சியுடன் கடன் வாங்கும்/வாங்க நினைக்கும் மக்களுக்கு வங்கிகள் இன்முகம் காட்டுவதே இல்லை. எனக்குத் தெரிந்து முந்தைய தலைமுறைக்கும், தற்போதைய தலைமுறைக்கும் உள்ள வேறுபாடு ஒன்று தான். முன்பு வங்கிகள் கடன் கோரிக்கைகளை நேரடியாக நிராகரித்து வந்தனர். இப்பொழுது, தருவதாய்க் கூறி நேரத்தைக் கடத்தி பிறகு இல்லை என்பதை எப்படியெல்லாம் வேறு விதமாகக் கூற முடியும் என சிந்தித்து, அதில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மிகப் பொருந்தி வரும் சாக்கைக் காரணம் காட்டுவது புதிய நீதி ஆகி விட்டது.

நான் சமீபத்தில் கேட்ட சில முன்னுக்குப் பின் முரணான வாசகங்கள்:

முன்: "உங்களுக்கு எண்பது லட்சங்கள் வரை கடன் வழங்கப்படும்"
பின்: "நீங்கள் வாங்க நினைக்கும் நிலத்திற்கு வாரிய அங்கீகாரம் இல்லை. அதனால் கடன் கொடுக்க இயலாது"

முன்: "சொத்துக்களை அடமானமாக வைத்தால் தாராளமாகக் கடன் தருவோம்"
பின்: "சொத்து நிலமாக இருந்தால் கடன் கொடுப்பதில்லை. ஒரு குடியிருப்பு வளாகம் (வீடோ, விடுதியோ) இருந்தால் நிச்சயம் கடன் கொடுக்கப்படும்.

முன்: "வீடு இருந்தால் போதும். புதிது பழையது என்றெல்லாம் பேதம் எங்களுக்கு இல்லை. என்ன இருந்தாலும் நிலம் இருக்கிறதல்லவா. நிச்சயம் கொடுப்போம்"
பின்: "வீடு சற்று பழையதாக உள்ளது. இது போன்ற சொத்துக்களுக்கு கடன் தருவதில்லை"

முன்: "உங்கள் வருமானத்தை வைத்துப் பார்க்கும் பொழுது எளிதாக முப்பது லட்சங்கள் வரை தனி நபர்க் கடன் வழங்க முடியும்"
பின்: "நீங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்"

முன்: "எங்கள் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள அனைவருக்கும் கடனுதவி வழங்கப்படும்"
பின்: "நீங்கள் தற்போதய பணியில் ஏழு மாதமாகத்தான் உள்ளீர்கள். அதனால் தங்களுக்குக் கடன் தர இயலாது"

எத்தனை வாசகங்கள், அதில் தான் எத்தனை வஞ்சனைகள்... இந்த நிலை நீடித்தால் வங்கிகள் என்பதை வஞ்சகர்கள் என மாற்றினால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக