வியாழன், 19 பிப்ரவரி, 2009

மெல்லத்திறந்தது கதவு

மறையத்தொடங்கிய ஆதவனின் பொன்னிறக்கதிர்கள் முயன்றும் நுழைய முடியா இருட்டறையில் இருண்ட நெஞ்சமொன்றும் இருப்பதன் அறிகுறியாய் ஓர் அழுகைக்குரல். மூடிய கதவும், இருள் சூழும் இருளும், முட்டித்தெறித்த கதறலும் அப்பாவையின் வலி உயிர் வரை ஆழ்ந்திருப்பதை உணர்த்தின. முப்பது வயது தாண்டியும், முடிகளில் சில வெள்ளிகள் முளைத்தும் மனைவியாகி முழுமை பெறாத முதிர்கன்னியின் மனச்சுமையை சமுதாயம் ஏனோ புறக்கணித்தே விடுகிறது. காதலித்தவனை காரணங்கண்டு பிரிய வைத்து, அக்காரணத்தின் காரணமாகி, நம்பிக்கையை இழக்க வைத்து, ஆயிரம் பேர் சுற்றத்திலும் தனிமைச்சிறையில் அடைய வைத்து கை கொட்டிச்சிரிப்பதும் ஏனோ அதன் பண்பாடும் ஆகிப்போனது. ஆண் போல் இருப்பதாய், அழகிற்குறைவதாய் ஆயிரமாயிரம் காரணம் கேட்டு தன்னையே வெறுத்தவளின், வெறுப்பவளின் வேதனை பொங்கும் வாழ்கையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

இருளும் இன்னலும் மட்டுமே நிறைந்த அத்தருணத்தை இரவிற்பூத்த மின்னல் கொடியாய்க்கலைத்தது சிணுங்கிய அவள் கைத்தொலைபேசி. கண்ணீர்த்துளி வழியே அழைப்பவன் பெயர் மங்கித்தெரிய மனதை இறுக்கி மூடி வாய் திறந்தாள். இதயத்தரையில் இருந்து அவன் மேல் ஈர்ப்பிருந்தும் இன்முகம் காட்ட ஏனோ இயலவில்லை அவளுக்கு. பயம் - தன்னையே நம்ப மறுக்கும், வாழ்க்கையில் தடுமாறித்தோற்ற, தனிமைப்பட்ட, தனித்து விடப்பட்ட ஒரு தாரகைக்கே உண்டான பயம். பல முறை உடைக்கப்பட்டு ஒட்டப்பெற்ற நெஞ்சம், மற்றுமோர் விரிசல் தாங்காதெனும் கலவரம். தனித்தும் தோற்க்கக்கூடாதெனும் அவள் வைராக்கியம் ஏனோ சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. அன்பை வார்த்தைகளாக்கி, அரவணைப்பை வாக்கியங்களாக்கி, தாய்ப்பாலின் நேர்மையுடன் "எனை மணந்து கொள்வாயா?" என ஏக்கமாய்க்கேட்ட அவன் குரல் திறந்தது மூடிய அவள் அறைக்கதவை மட்டுமல்ல, மூடப்பட்ட அவள் மனக்கதவையும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக