சனி, 21 பிப்ரவரி, 2009

எது நீதி?

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனைகள் என்று சமூகவியல் பாடங்களில் காலம் காலமாக அச்சுகள் மாறியும், மாறாமல் தொடரும் பட்டியல் ஒன்று உண்டு. ஜனத்தொகை பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை என்று நீளும் அந்த பட்டியல் நடைமுறைக்கேற்ப மாற்றப்பட்டதும் இல்லை. மாற்றப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை... கல்வித்தரம் சம்மந்தப்பட்ட என் ஆதங்கத்தை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு கூற வந்த விஷயத்தை கூறி விடுகிறேன்...

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனை எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதிலளிப்பீர்கள்? மக்கள் தொகை? சீர் கெட்ட அரசியல்? ஐ.டி? (சிலர் இதை கூட சமூக பிரச்சனையாகவே கருதுகிறார்கள் :)) இவை அனைத்தையும் மீறிய ஒன்று இருக்கிறது - நீதி. "காலத்தாற் செய்த உதவி" என்ற வள்ளுவரின் கூற்று உதவிக்கு பொருந்துவதை விட நீதிக்கு இரண்டு மடங்கு பொருந்தும், பொருந்த வேண்டும். ஒரு அநீதி இழைக்கப்படுகையில் அதன் தண்டனை கடுமையானதாகவும், உடனடியாகவும் இருந்தால் அந்த குற்றம் மறுபடியும் நடக்க கூடிய வாய்ப்பு பன்மடங்கு குறைகிறது. அதே தண்டனை இழுத்தடிக்கப்பட்டு, வழக்கு வலுவிழந்து, வழக்கு நடத்துபவன் உருவிழந்து தவிக்கும் வரை நடந்தால் அங்கு வழங்கப்படுவது நீதியும் அல்ல, அதை வழுங்கவது ஒரு நீதி மன்றமும் அல்ல. மேலை நாடுகளில் மக்கள் விழிப்புணர்வு அதிகம், சராசரி குடிமகனின் சமூக அக்கறை அதிகம் என்றெல்லாம் கருத்துகள் நிலவினாலும் உண்மை காரணம் அவைகளல்ல. பயம்... தண்டனை பயம். ஒரு வழக்கு நீதி மன்றங்களுக்கு செல்லுமேயானால் அந்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிந்தாக வேண்டும். அதே போல் ஒரு சிறிய சாலை விதிமுறை மீறலில் தொடங்கி அனைத்து குற்றத்திற்கும் உடனடியாய் தண்டனை வழங்கப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பே மக்களின் தேர்ந்த நடத்தையாகவும், சமூக பொறுப்பாகவும் வெளியுலகிற்கு தெரிய வருகிறது.

இது இந்தியாவில் நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா? சற்றே சிந்தித்து பார்ப்போம்... முதல் தடங்கல் - சீர்கெட்ட அரசியல். அரசியல்வாதிகளே சட்டம் இயற்றுகிறார்கள்... அவர்களே அதை மீறவும் செய்கிறார்கள்... ஆகையால் மிகக்கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படுவது அரிதினும் அரிது. அப்படியென்றால் அரசியல் தானே முழு முதல் சமுதாய பிரச்சனையாக கருதப்பட வேண்டும்? இல்லை... ஏனென்று தொடர்ந்து பாருங்கள். இரண்டாம் தடங்கல் - நீதிபதிகள்/வழக்கறிஞர்கள். ஒரு அரசியல்வாதி தவறு செய்பவனாக இருந்து வக்கீல்களும், நீதிபதிகளும் நீதியை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தால், அந்த அரசியல்வாதி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நியாயமில்லை. ஆனால் இதுவாவது நடைமுறைக்கு சாத்தியமானதா என்றால் சாத்தியமே... ஆனால் நிச்சயமாய் அதை நோக்கி நாம் பயணிக்கவில்லை. நீதிமன்றத்தினுள் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்ட அறிஞர் மற்றும் சட்ட பேராசிரியரான சுப்ரமணிய சுவாமி நீதிமன்ற வளாகத்தினுள் சக வழக்கறிஞர்களால் தாக்கப்படுகிறார். அதை செய்த வழக்கறிஞர்களை கைது செய்ய வந்த போலீஸார் மீது கல் வீச்சு... சட்டக்கல்லூரியில் ஜாதி வெறி தாண்டவமாடி ஒரு மாணவனை சக மாணவர்கள் போலீஸார் முன் இரும்பு தடிகளால் அடித்து சிதைக்கின்றனர். இவர்களா நாளைய வழக்கறிஞர்கள், நீதிபதிகள்? நீதியை நிலை நாட்ட ஒரு குற்றவாளி? இதுவல்லவோ ஜனநாயகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக