செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கலைமாமணி

தமிழக கலை உலக பிரமுகர்களுக்கு நம் மாநிலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது என்று கலைமாமணியை கூறலாம்... எத்தனையோ கலை மேதைகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த விருது, இப்பொழுது இலவச தொலைக்காட்சிகளை போல் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் வழங்கப்படுவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய விஷயம். இம்முறை கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள் பட்டியலை சற்றே அலசி பார்ப்போம்...

தமிழ் எழுத்தாளர் மாதவன்; கவிஞர் சிற்பி; பாடகர் மகாராஜபுரம் ஸ்ரீனிவாசன்; ட்ரம்ஸ் சிவமணி; தவில் வித்வான் ராமநாதன்; பாரதனாட்டியக்கலைஞர்கள் சங்கீதா கபிலன், ஐஸ்வர்யா தனுஷ்; நடிகர்கள் பரத், பசுபதி, மீரா ஜாஸ்மின், நயன்தாரா, அசின்; இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்; கலை இயக்குனர் P.கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் சேரன்; வயலின் கலைஞர் எம்பார் கண்ணன்.

இதில் திரைத்துறை சாராதோரை பற்றி எனக்கு தெரியாது. தெரியாதவர்களின் திறமை குறித்து விமர்சிப்பதும் முறையாகாது. குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய பெயர்களில் சில - ஐஸ்வர்யா தனுஷ், மீரா ஜாஸ்மின், பரத், நயன்தாரா, அசின், ஹாரிஸ் ஜெயராஜ்... சூப்பர் ஸ்டாரின் மகள் என்பதை தவிர ஐஸ்வர்யாவுக்கு எந்த விதமான தகுதியும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை... மீரா ஜாஸ்மின் நல்ல நடிகை என்பதில் எனக்கு ஐயமில்லை... ஆனால் கலைமாமணி வழங்க அவர் என்ன செய்தார் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை... இதே விவாதம் அசினுக்கும், நயன்தாராவுக்கும் பொருந்தும். வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நடிகர்களில் பரத் ஒருவர்... ஆனால் அதற்குள் கலைமாமணி என்று அவரை அழைப்பது நிச்சயமாக பொருத்தமானது அல்ல. ஹாரிஸ் ஜெயராஜ்... இவரை பற்றி எனது ஆங்கில பதிவேட்டில் "காப்பி கேட்" என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்... அப்படி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பாரபட்சமின்றி மற்ற இசை தொகுப்புகளில் இருந்து 'திருடி' தன் சொந்த படைப்பை வெளியிடும் இவர் கலைமாமணியா?

பசுபதி போன்ற ஒரு நடிகரும், சேரன் போன்றதொரு இயக்குனரும், ட்ரம்ஸ் சிவமணி போன்றதொரு கலைஞரும் விருது வாங்கும் மேடையில், இவர்களுக்கும் சமமாக விருது வழங்கி கௌரவிக்கப்படுவது உண்மையான திறமைக்கும், கடின உழைப்புக்கும் நேரும் அவமானம் என்பதே ஏன் தாழ்மையான கருத்து! விருது வழங்கும் அளவுக்கு யாரும் ஏதும் செய்யவில்லை எனில் யாருக்கும் விருதே வழங்காமல் இருக்கலாம். உண்மையிலேயே ஒரு விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவருக்கு வழங்கப்படும் போது தான் அந்த விருதை பெறுபவருக்கும் பெருமை, அந்த விருதுக்கும் பெருமை...

4 கருத்துகள்: